தத்ததன தானான தத்ததன தானான
தத்ததன தானான ...... தனதான
பக்கமுற நேரான மக்களுட னேமாதர்
பத்தியுடன் மேல்மூடி ...... யினிதான
பட்டினுட னேமாலை யிட்டுநெடி தோர்பாடை
பற்றியணை வோர்கூவி ...... யலைநீரிற்
புக்குமுழு காநீடு துக்கமது போய்வேறு
பொற்றியிட வேயாவி ...... பிரியாமுன்
பொற்கழலை நாடோறு முட்பரிவி னாலோது
புத்திநெடி தாம்வாழ்வு ...... புரிவாயே
இக்கனுக வேநாடு முக்கணர்ம காதேவர்
எப்பொருளு மாமீசர் ...... பெருவாழ்வே
எட்டவரி தோர்வேலை வற்றமுது சூர்மாள
எட்டியெதி ரேயேறு ...... மிகல்வேலா
மக்களொடு வானாடர் திக்கில்முனி வோர்சூழ
மத்தமயில் மீதேறி ...... வருவோனே
வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ
வைத்தபடி மாறாத ...... பெருமாளே.
- பக்கம் உற நேரான மக்களுடனே மாதர் பத்தியுடன் மேல்
மூடி இனிதான பட்டின் உடனே
பக்கத்தில் சூழ்ந்து நிற்கும் நல்லொழுக்கம் நிறைந்த பிள்ளைகளும் மாதர்களும் அன்புடன் உடலின் மேல் மேன்மையான பட்டாடையால் மூடி, - மாலை இட்டு நெடிது ஓர் பாடை பற்றி அணைவோர் கூவி
மாலையை அணிவித்து நீண்ட ஒரு பாடையைப் பற்றிக் கொண்டு அணைபவர்கள் கூவி அழ, - அலை நீரில் புக்கு முழுகா நீடு துக்கம் அது போய்
அலை வீசும் நீரில் படிந்து முழுகி, மிஞ்சியிருந்த துக்கமும் நீங்கி விலக, - வேறு பொன் தீ இடவே ஆவி பிரியா முன்
மாற்றார்கள் போல நடந்துகொண்டு, உடலின் மீது பொன்னிறமான நெருப்பை மூட்ட, உயிர் நீங்கும் முன்பே, - பொன் கழலை நாள் தோறும் உள் பரிவினால் ஓது(ம்) புத்தி
நெடிது ஆம் வாழ்வு புரிவாயே
உனது அழகிய திருவடியைத் தினமும் உள்ளத்தில் அன்புடன் ஓதுகின்ற அறிவு பெருகும் வாழ்க்கையைத் தந்து அருளுக. - இக்கன் உகவே நாடு(ம்) முக்க(ண்)ணர் மகா தேவர்
எப்பொருளும் ஆம் ஈசர் பெரு வாழ்வே
கரும்பு வில்லை ஏந்திய மன்மதன் அழிந்து போகும்படி திருவுள்ளம் கொண்ட, (சூரிய, சந்திர, அக்கினி என்னும்) மூன்று கண்களை உடைய, மகா தேவராகிய சிவபெருமான், எல்லாப் பொருளும் எவ்விடமும் தாமாகவே நிற்கும் ஈசரின் பெரிய செல்வமே, - எட்ட அரிது ஓர் வேலை வற்ற முது சூர் மாள எட்டி எதிரே
ஏறும் இகல் வேலா
ஆழம் காண முடியாத, மிகப் பரந்த கடல் வற்றவும், பழைய சூரன் இறந்து படவும், மேற் சென்று எதிரெழுந்த வலிமை வாய்ந்த வேலனே, - மக்களோடு வான் நாடர் திக்கில் முனிவோர் சூழ மத்த மயில்
மீது ஏறி வருவோனே
மக்களும், விண்ணோர்களும், பல திசைகளிலும் உள்ள முனிவர்களும் சூழ்ந்து வர, களிப்பு மிகுந்த மயில் மீது ஏறி நகர்வலம் வருவோனே, - வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ
சேமித்து வைத்த நிதியைப் போல விரும்பி தினந்தோறும் வந்து தொழும் அடியார்கள் வாழும்படி, - வைத்த படி மாறாத பெருமாளே.
அவர்கள் மேல் வைத்த கருணைத் திறம் நீங்காத பெருமாளே.