தானனா தத்தனத் தானனா தத்தனத்
தானனா தத்தனத் ...... தனதான
கோலகா லத்தைவிட் டாசுபா டக்கொடிக்
கோவைபா டக்கொடிக் ...... கொடிவாதிற்
கோடிகூ ளக்கவிச் சேனைசா டக்கெடிக்
கூறுகா ளக்கவிப் ...... புலவோன்யான்
சீலகா லப்புயற் பாரிசா தத்தருத்
த்யாகமே ருப்பொருப் ...... பெனவோதுஞ்
சீதரா சித்ரவித் தாரமே செப்பிடக்
கேளெனா நிற்பதைத் ...... தவிர்வேனோ
ஆலகா லப்பணிப் பாயல்நீ ளப்படுத்
தாரவா ரக்கடற் ...... கிடைசாயும்
ஆழிமா லுக்குநற் சாமவே தற்குமெட்
டாதரூ பத்தினிற் ...... சுடராய
காலகா லப்ரபுச் சாலுமா லுற்றுமைக்
காகவே ளைப்புகக் ...... கழுநீராற்
காதும்வே ழச்சிலைப் பாரமீ னக்கொடிக்
காமவேள் மைத்துனப் ...... பெருமாளே.
- கோலகாலத்தை விட்டு ஆசு பாடக் கொடி கோவை பாட
வீண் ஆடம்பரங்கள் செய்யாமல் ஆசு கவிகள் பாடவும், கொடிக்கவி, கோவை என்னும் ப்ரபந்த வகைக் கவிகள் பாடவும்*, - கொடிக் கொ(ட்)டி வாதில் கோடி கூள(ம்) கவிச் சேனை
சாடக் கெடிக் கூறு காளக் கவிப் புலவோன் யான்
காக்கைக் கூட்டங்கள் போலக் கூச்சலிடும் வாதத்தில் கோடிக் கணக்கான குப்பை போன்ற பயனற்ற கவிஞர்களின் கும்பலை வெல்வேன் என்று கீர்த்தியைக் கூறும் பெரு மழை போலக் கவிகள் பாடவும் வல்ல புலவன் நான். - சீல காலப் புயல் பாரிசாதம் தரு த்யாக மேருப் பொருப்பு என
ஓதும் சீதரா
நியதியுடன் உரிய காலத்தில் பெய்யும் மேகம் என்றும், பாரிஜாத தெய்வ மரம் என்றும், கொடையில் மேரு மலை என்றும் (பரிசு பெறுவோர்கள்) போற்றுகின்ற திருமால் போன்றவனே, - சித்ர வித்தாரமே செப்பிடக் கேள் எனா நிற்பதைத்
தவிர்வேனோ
(உன் மீது) நான் சித்திரக் கவி, வித்தாரக் கவி* பாட, நீ கேட்பாயாக என்றெல்லாம் நான் (செல்வந்தர்களிடம்) நின்று காத்திருத்தலை ஒழிவேனோ? - ஆல காலப் பணிப் பாயல் நீளப் படுத்து ஆரவாரக் கடற்கு
இடை சாயும் ஆழி மாலுக்கு
ஆலகால விஷத்தைக் கொண்டுள்ள பாம்பாகிய ஆதிசேஷன் என்னும் படுக்கையில் நீண்டு படுத்து, பேரொலி செய்யும் கடலின் மத்தியில் பள்ளி கொண்டிருப்பவனும், சக்ராயுதம் ஏந்தியவனுமான திருமாலுக்கும், - நல் சாம வேதற்கும் எட்டாத ரூபத்தினில் சுடர் ஆய கால
கால ப்ரபு
நல்ல சாம வேதம் முதலான வேதத் தாமரையின் மேல் வீற்றிருக்கும் பிரமனுக்கும் எட்டாத உருவத்தில் ஜோதி வடிவான, காலகாலனான பிரபுவாகிய சிவ பெருமான் - சாலும் மாலுற்று உமைக்காக வேளைப் புகக் கழு நீரால்
மிகுதியான ஆசை கொண்டு பார்வதியை மணக்கும் பொருட்டு, தக்க சமயத்தில் செங்கழு நீர் மலர் என்ற ஐந்தாவது பாணமாகிய நீலோற்பலம் என்னும் பாணம் கொண்டு - காதும் வேழச் சிலைப்பாரம் மீனக் கொடிக் காம வேள்
மைத்துனப் பெருமாளே.
(சிவபிரானைத்) தாக்கிய கரும்பு வில்லை எந்தியவனும், பெருமை வாய்ந்த மீன் கொடியைக் கொண்டவனுமாகிய மன்மதனுடைய மைத்துனனாகிய** பெருமாளே.