திருப்புகழ் · 1080குடம் என ஒத்த (பொதுப்பாடல்கள்)
kudamenaoththa
தனதன தத்த தந்த தனதன தத்த தந்த
தனதன தத்த தந்த ...... தனதான
குடமென வொத்த கொங்கை குயில்மொழி யொத்த இன்சொல்
குறமகள் வைத்த நண்பை ...... நினைவோனே
வடவரை யுற்று றைந்த மகதெவர் பெற்ற கந்த
மதசல முற்ற தந்தி ...... யிளையோனே
இடமுடன் வைத்த சிந்தை யினைவற முத்தி தந்து
இசையறி வித்து வந்து ...... எனையாள்வாய்
தடவரை வெற்பி னின்று சரவண முற்றெ ழுந்து
சமர்கள வெற்றி கொண்ட ...... பெருமாளே.
பத உரை · word meanings
- குடம் என ஒத்த கொங்கை குயில் மொழி ஒத்த இன் சொல்
குற மகள் வைத்த நண்பை நினைவோனே
குடம் என்று உவமை சொல்லும்படியான மார்பையும், குயிலின் மொழி என்று உவமை சொல்லும்படியான இனிய சொல்லையும் உடைய குற மகள் வள்ளி உன் பால் வைத்த அன்பை நினைத்து அவளுக்கு உதவியவனே, - வட வரை உற்று உறைந்த மக தெவர் பெற்ற கந்த
வடக்கே உள்ள கயிலை மலையில் பொருந்தி வீற்றிருக்கும் மகா தேவர் என்று பெயர் பெற்ற சிவபெருமான் பெற்ற கந்த மூர்த்தியே, - மத சலம் உற்ற தந்தி இளையோனே
மத நீர் நிறைந்த யானை முக விநாயக மூர்த்தியின் தம்பியே, - இடமுடன் வைத்த சிந்தை இனைவு அற முத்தி தந்து இசை
அறிவித்து வந்து எனை ஆள்வாய்
நீ இடம் பெற வேண்டும் என்று வைத்த என் உள்ளம் வருந்துதல் ஒழிய எனக்கு முக்தி கொடுத்து, இசை ஞானத்தை அறிவித்து ஊட்டி, வந்து என்னை ஆண்டருள்க. - தட வரை வெற்பில் நின்று சரவணம் உற்று எழுந்து சமர்
கள(ம்) வெற்றி கொண்ட பெருமாளே.
உயர்ந்த சிகரங்களை உடைய விசாலமான கயிலை மலையில் தோன்றி, சரவணப் பொய்கையில் எழுந்து, போர்க்களத்தில் வெற்றி பெற்ற பெருமாளே.



