திருப்புகழ் · 1044அடை படாது (பொதுப்பாடல்கள்)

adaipadAdhu

தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
அடைப டாது நாடோறும் இடைவிடாது போம்வாயு
அடைய மீளில் வீடாகு ...... மெனநாடி
அருள்பெ றாவ னாசார கரும யோகி யாகாமல்
அவனி மீதி லோயாது ...... தடுமாறும்
உடலம் வேறு யான்வேறு கரணம் வேறு வேறாக
உதறி வாச காதீத ...... அடியூடே
உருகி ஆரி யாசார பரம யோகி யாமாறுன்
உபய பாத ராசீக ...... மருள்வாயே
வடப ராரை மாமேரு கிரியெ டாந டாமோது
மகர வாரி யோரேழு ...... மமுதாக
மகுட வாள ராநோவ மதிய நோவ வாரீச
வனிதை மேவு தோளாயி ...... ரமுநோவக்
கடையு மாதி கோபாலன் மருக சூலி காபாலி
புதல்வ கான வேல்வேடர் ...... கொடிகோவே
கனக லோக பூபால சகல லோக ஆதார
கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • அடை படாது நாள் தோறும் இடை விடாது போ(கு)ம் வாயு அடைய மீளில்
    உள்ளே அடைபட்டுப் போகாமல் ஒவ்வொரு நாளும் இடை விடாமல் போகின்ற மூச்சுக் காற்று முழுமையும் வீணாகாது உடலில் மீண்டும் வந்து (கும்பக முறையில்*) அடங்குமாயின்,
  • வீடு ஆகும் என நாடி அருள் பெறா அனாசார கரும யோகி ஆகாமல்
    முக்தி வீடு கிடைக்கும் என்ற உண்மையை ஆராய்ந்து விரும்பி உனது திருவருளைப் பெறாத, ஒழுக்கம் இல்லாத கரும யோகியாய் வாழ்வைக் கழிக்காமல்,
  • அவனி மீதில் ஓயாது தடுமாறும்
    இப் பூமியில் எப்போதும் நான் கெட்டு அலையாமல்,
  • உடலம் வேறு யான் வேறு கரணம் வேறு வேறாக உதறி
    எனது உடல் வேறு, நான் வேறு, என் (மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற) கரணங்கள் வேறு - இவைகள் யாவும் வேறு வேறு என்று உதறித் தள்ளி,
  • வாசக அதீத அடியூடே உருகி
    உரைகளுக்கு எட்டாத உன் திருவடிச் சரணங்களில் வீழ்ந்து, உள்ளம் உருகி,
  • ஆரிய ஆசார பரம யோகி ஆம் ஆறும்
    மேலான ஆசார ஒழுக்கம் வாய்ந்த சிறந்த சிவ யோகி ஆகும் பொருட்டு,
  • உன் உபய பாத ராசீகம் அருள்வாயே
    உன் இரண்டு திருவடிகளாகிய ராஜபோகத்தை அருள்வாயாக.
  • வட பராரை மா மேரு கிரி எடா நடா
    வடக்கே உள்ளதும், பருத்த அடிப்பாகம் உடையதுமாகிய மேரு மலையை எடுத்து (மத்தாக) நட்டு,
  • மோது மகர வாரி ஏழும் அமுதாக
    அலைகள் மோதும் கடல்கள் ஓர் ஏழினின்றும் அமுது வரும்படி,
  • மகுட வாள் அரா நோவ மதியம் நோவ
    ஒளி பொருந்திய மணி முடிகளை உடைய பாம்பாகிய வாசுகியின் உடல் (கயிறாக இழுத்ததால்) வலிக்கும்படியும், (தூணாகச் சாத்தப்பட்ட) சந்திரனின் உடல் நோவவும்,
  • வாரீச வனிதை மேவும் தோள் ஆயிரமும் நோவ
    தாமரை மலரில் வீற்றிருக்கும் லக்ஷ்மி தேவி விரும்பும் தனது ஆயிரம் தோள்களும்** நோவும்படியும்,
  • கடையும் ஆதி கோபாலன் மருக
    கடலைக் கடைந்த ஆதி மூர்த்தியாகிய கோபாலனின் மருகனே,
  • சூலி காபாலி புதல்வ கான வேல் வேடர் கொடி கோவே
    சூலாயுதத்தையும், பிரம்ம கபாலத்தையும் ஏந்துகிற சிவபெருமானது மகனே, வேல் பிடித்த வேடர்களின் கொடிபோன்ற வள்ளியின் தலைவனே.
  • கனக லோக பூபால சகல லோக ஆதார
    பொன்னுலகமாகிய தேவர்கள் உலகைப் பரிபாலித்த அரசே, எல்லா உலகங்களுக்கும் ஆதாரமாக உள்ளவனே,
  • கருணை மேருவே தேவர் பெருமாளே.
    உனது கருணை மேரு மலையைப் போன்று பெரியது, தேவர்களுக்குப் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits