திருப்புகழ் 1011 உரை தரு பர சமய (பொதுப்பாடல்கள்)

தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன ...... தந்ததான
உரைதரு  பரசம  யங்க  ளோதுவ 
துருவென  அருவென  வொன்றி  லாததொ 
ரொளியென  வெளியென  வும்ப  ராமென  ......  இம்பராநின் 
றுலகுகள்  நிலைபெறு  தம்ப  மாமென 
வுரைசெய  அதுபொருள்  கண்டு  மோனமொ 
டுணர்வுற  வுணர்வொடி  ருந்த  நாளும  ......  ழிந்திடாதே 
பரகதி  பெறுவதொ  ழிந்தி  டார்வன 
பரிசன  தெரிசன  கந்த  வோசைகள் 
பலநல  விதமுள  துன்ப  மாகிம  ......  யங்கிடாதே 
பரிபுர  பதமுள  வஞ்ச  மாதர்கள் 
பலபல  விதமுள  துன்ப  சாகர 
படுகுழி  யிடைவிழு  பஞ்ச  பாதக  ......  னென்றுதீர்வேன் 
அரகர  சிவசுத  கந்த  னேநின 
தபயம  பயமென  நின்று  வானவர் 
அலறிட  வொழிகினி  யஞ்சி  டாதென  ......  அஞ்சல்கூறி 
அடல்தரு  நிருதர  நந்த  வாகினி 
யமபுர  மடையஅ  டர்ந்து  போர்புரி 
அசுரன  தகலமி  டந்து  போகவ  ......  கிர்ந்தவேகம் 
விரிகடல்  துகளெழ  வென்ற  வேலவ 
மரகத  கலபசி  கண்டி  வாகன 
விரகுள  சரவண  முந்தை  நான்மறை  ......  யந்தமோதும் 
விரைதரு  மலரிலி  ருந்த  வேதனும் 
விடவர  வமளிது  யின்ற  மாயனும் 
விமலைகொள்  சடையர  னும்ப  ராவிய  ......  தம்பிரானே. 
  • உரை தரு பர சமயங்கள் ஓதுவது உரு என அரு என ஒன்று இலாதது
    சொல்லப்படுகின்ற மேலான சமயங்களால் ஓதப்படுவதும், உருவம், உருவமின்மை என்று ஒன்றும் இல்லாததும்,
  • ஒர் ஒளி என வெளி என உம்பராம் என இம்பரா நின்று
    பேரொளி என்றும், வெட்ட வெளி என்றும், மேலே உளதென்றும், இங்கே உளதென்றும் நிற்பதாய்,
  • உலகுகள் நிலைபெறு தம்பமாம் என உரை செய அது பொருள் கண்டு
    உலகங்கள் நிலை பெற்று நிற்க உதவும் பற்றுக் கோடு என்றும் சொல்லும்படியாய் உள்ள அந்தப் பரம் பொருளை உணர்ந்து அறிந்து,
  • மோனம் ஒடு உணர்வு உற உணர்வொடு இருந்த நாளும் அழிந்திடாதே
    மெளன நிலையில் ஞான உணர்ச்சி உண்டாக, அந்த ஞான உணர்ச்சியோடு இருந்து, அத்தகைய நாட்கள் அழிந்து வீண் போகாமல்,
  • பரகதி பெறுவது ஒழிந்திட ஆர்வன (ஸ்)பரிசன தெரிசன கந்த ஓசைகள்
    மேலான நற்கதியை பெறும்படியான பாக்கியம் என்னை விட்டு ஒழிந்து போகும்படி, ஆசைக்கிடம் தரும் ஸ்பரிசம், ரூபம், வாசனை, ருசி, ஓசை முதலான ஐம்புலன்களால் உண்டாகும்
  • பல நல விதம் உள துன்பம் ஆகி மயங்கிடாதே
    பலவிதமான சிற்றின்பங்களைக் கொண்டதான துன்பத்தில் பட்டு நான் மயங்காமல்,
  • பரிபுர பதம் உள வஞ்ச மாதர்கள் பல பல விதம் உள துன்ப சாகர
    சிலம்புகள் அணிந்த பாதங்களை உடைய வஞ்சகம் கொண்ட விலைமாதர்கள் பலபல வகையாக உள்ள துன்பக் கடலாகிய
  • படுகுழி இடைவிழு பஞ்ச பாதகன் என்று தீர்வேன்
    பெருங்குழியில் விழுகின்ற பஞ்ச* மகா பாதங்களைச் செய்யும் நான் என்றைக்கு உணர்ந்து கரை ஏறுவேன்?
  • அரகர சிவ சுத கந்தனே நினது அபயம் அபயம் என நின்று வானவர் அலறிட
    ஹரஹர சிவ குமாரனே, கந்தபிரானே, உனது அடைக்கலம், அடைக்கலம் என்று தேவர்கள் ஓலமிட,
  • ஒழிக இனி அஞ்சிடாது என அஞ்சல் கூறி
    (உங்கள் பயம்) இனி ஒழிவதாக, பயப்பட வேண்டாம் என்று அருள் பாலித்து,
  • அடல் தரு நிருதர் அநந்த வாகினி யமபுரம் அடைய அடர்ந்து போர் புரி அசுரனது அகலம் இடந்து போக
    வலிமை மிக்க அசுரர்கள், அளவற்ற சேனைகள் யமபுரம் சேரவும், நெருங்கிச் சண்டை செய்யும் அசுரன் சூரனுடைய மார்பு கிழிபட,
  • வகிர்ந்த வேகம் விரி கடல் துகள் எழ வென்ற வேலவ
    பிளந்தெறிந்த வேகத்தில், பரந்த கடல் வற்றித் தூளெழும்படி வெற்றி கொண்ட வேலவனே,
  • மரகத கலப சிகண்டி வாகன விரகுள சரவண
    பச்சை நிறமான தோகையைக் கொண்ட மயில் வாகனனே, சாமர்த்தியம் உள்ள சரவணனே,
  • முந்தை நான் மறை அந்தம் ஓதும் விரை தரு மலரில் இருந்த வேதனும்
    பழைய நான்கு வேதங்களை முடிவு வரை ஓத வல்லவனும், மணம் கமழ் தாமரை மலரில் வீற்றிருந்த பிரமனும்,
  • விட அரவு அமளி துயின்ற மாயனும் விமலைகொள் சடையரனும் பராவிய தம்பிரானே.
    விஷத்தை உடைய ஆதிசேஷனான பாம்புப் படுக்கையில் உறங்கும் மாயோனாகிய திருமாலும், பரிசுத்தமான கங்கையை உடைய சடையைக் கொண்ட சிவபெருமானும் போற்றும் தம்பிரானே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com