திருப்புகழ் 917 விகட பரிமளம் (வயலூர்)

தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன
விகட  பரிமள  ம்ருகமத  இமசல 
வகிர  படிரமு  மளவிய  களபமு 
மட்டித்தி  தழ்த்தொடைமு  டித்துத்தெ  ருத்தலையில் 
உலவி  யிளைஞர்கள்  பொருளுட  னுயிர்கவர் 
கலவி  விதவிய  னரிவையர்  மருள்வலை 
யிட்டுத்து  வக்கியிடர்  பட்டுத்  தியக்கியவர் 
விரவு  நவமணி  முகபட  எதிர்பொரு 
புரண  புளகித  இளமுலை  யுரமிசை 
தைக்கக்க  ழுத்தொடுகை  யொக்கப்பி  ணித்திறுகி  ......  யன்புகூர 
விபுத  ரமுதென  மதுவென  அறுசுவை 
அபரி  மிதமென  இலவிதழ்  முறைமுறை 
துய்த்துக்க  ளித்துநகம்  வைத்துப்ப  லிற்குறியின் 
வரையு  முறைசெய்து  முனிவரு  மனவலி 
கரையு  மரிசன  பரிசன  ப்ரியவுடை 
தொட்டுக்கு  லைத்துநுதல்  பொட்டுப்ப  டுத்திமதர் 
விழிகள்  குழைபொர  மதிமுகம்  வெயர்வெழ 
மொழிகள்  பதறிட  ரதிபதி  கலைவழி 
கற்றிட்ட  புட்குரல்மி  டற்றிற்ப  யிற்றிமடு  ......  வுந்திமூழ்கிப் 
புகடு  வெகுவித  கரணமு  மருவிய 
வகையின்  முகிலென  இருளென  வனமென 
ஒப்பித்த  நெய்த்தபல  புட்பக்கு  ழற்சரிய 
அமுத  நிலைமல  ரடிமுதல்  முடிகடை 
குமுத  பதிகலை  குறைகலை  நிறைகலை 
சித்தத்த  ழுத்தியநு  வர்க்கத்து  ருக்கியொரு 
பொழுதும்  விடலரி  தெனுமநு  பவமவை 
முழுது  மொழிவற  மருவிய  கலவியி 
தத்துப்ரி  யப்படந  டித்துத்து  வட்சியினில்  ......  நைந்துசோரப் 
புணரு  மிதுசிறு  சுகமென  இகபரம் 
உணரு  மறிவிலி  ப்ரைமைதரு  திரிமலம் 
அற்றுக்க  ருத்தொருமை  யுற்றுப்பு  லத்தலையில் 
மறுகு  பொறிகழல்  நிறுவியெ  சிறிதுமெய் 
உணர்வு  முணர்வுற  வழுவற  வொருஜக 
வித்தைக்கு  ணத்ரயமும்  நிர்த்தத்து  வைத்துமறை 
புகலு  மநுபவ  வடிவினை  யளவறு 
அகில  வெளியையு  மொளியையு  மறிசிவ 
தத்வப்ர  சித்திதனை  முத்திச்சி  வக்கடலை  ......  யென்றுசேர்வேன் 
திகுட  திகுகுட  திகுகுட  திகுகுட 
தகுட  தகுகுட  தகுகுட  தகுகுட 
திக்குத்தி  குத்திகுட  தக்குத்த  குத்தகுட 
டுமிட  டுமிமிட  டுமிமிட  டுமிமிட 
டமட  டமமட  டமமட  டமமட 
டுட்டுட்டு  டுட்டுமிட  டட்டட்ட  டட்டமட 
திகுர்தி  திகுதிகு  திகுகுர்தி  திகுகுர்தி 
தகுர்தி  தகுதகு  தகுகுர்தி  தகுகுர்தி 
திக்குத்தி  குத்திகுர்தி  தக்குத்த  குத்தகுர்தி  ......  என்றுபேரி 
திமிலை  கரடிகை  பதலைச  லரிதவில் 
தமர  முரசுகள்  குடமுழ  வொடுதுடி 
சத்தக்க  ணப்பறைகள்  மெத்தத்தொ  னித்ததிர 
அசுரர்  குலஅரி  அமரர்கள்  ஜயபதி 
குசல  பசுபதி  குருவென  விருதுகள் 
ஒத்தத்தி  ரட்பலவு  முற்றிக்க  லிக்கஎழு 
சிகர  கொடுமுடி  கிடுகிடு  கிடுவென 
மகர  சலநிதி  மொகுமொகு  மொகுவென 
எட்டுத்தி  சைக்களிறு  மட்டற்ற  றப்பிளிற  ......  நின்றசேடன் 
மகுட  சிரதலம்  நெறுநெறு  நெறுவென 
அகில  புவனமும்  ஹரஹர  ஹரவென 
நக்ஷத்ர  முக்கிவிழ  வக்கிட்ட  துட்டகுண 
நிருதர்  தலையற  வடிவெனு  மலைசொரி 
குருதி  யருவியின்  முழுகிய  கழுகுகள் 
பக்கப்ப  ழுத்தவுடல்  செக்கச்சி  வத்துவிட 
வயிறு  சரிகுடல்  நரிதின  நிணமவை 
எயிறு  அலகைகள்  நெடுகிய  குறளிகள் 
பக்ஷித்து  நிர்த்தமிட  ரக்ஷித்த  லைப்பரவி  ......  யும்பர்வாழ 
மடிய  அவுணர்கள்  குரகத  கஜரத 
கடக  முடைபட  வெடிபட  எழுகிரி 
அற்றுப்ப  றக்கவெகு  திக்குப்ப  டித்துநவ 
நதிகள்  குழைதர  இபபதி  மகிழ்வுற 
அமர்செய்  தயில்கையில்  வெயிலெழ  மயில்மிசை 
அக்குக்கு  டக்கொடிசெ  ருக்கப்பெ  ருக்கமுடன் 
வயலி  நகருறை  சரவண  பவகுக 
இயலு  மிசைகளு  நடனமும்  வகைவகை 
சத்யப்ப  டிக்கினித  கஸ்த்யர்க்கு  ணர்த்தியருள்  ......  தம்பிரானே. 
  • விகட பரிமள ம்ருகமத இமசல(ம்) வகிர படிரமும் அளவிய களபமும் மட்டித்து இதழ்த் தொடை முடித்துத் தெருத் தலையில் உலவி இளைஞர்கள் பொருள் உடன் உயிர் கவர் கலவி வித(ம்) வியன் அரிவையர்
    நிரம்ப நறுமணம் வீசும் கஸ்தூரி, பன்னீர் கலந்த சந்தனமும் சேர்ந்துள்ள கலவையை பூசிக்கொண்டு, மலர் மாலையை முடித்துக் கொண்டு, தெருவின் முன் புறத்தில் உலாவி, இளைஞர்களின் பொருளுடன் அவர்கள் உயிரையும் அபகரிக்கும் புணர்ச்சி வகைகளைக் காட்டும் வியக்கத் தக்க விலைமாதர்கள்.
  • மருள் வலை இட்டுத் துவக்கி இடர் பட்டுத் தியக்கி அவர் விரவு நவ மணி முக பட(ம்) எதிர் பொரு புரண(ம்) புளகித இள முலை உர(ம்) மிசை தைக்கக் கழுத்தொடு கை ஒக்கப் பிணித்து இறுகி அன்பு கூர
    தங்கள் மயக்க வலையில் இட்டு, கட்டிப் போட்டு, வந்தவர் வேதனைப் படும்படி மயங்கச் செய்து, அவர்களுடைய பொருந்திய நவரத்தின மாலை முன் தோன்றி எதிரில் முட்டுகின்ற நிறைவு கொண்டதும், புளகாங்கிதம் கொண்டதுமான இளம் மார்பகங்கள் நெஞ்சிலே அழுந்தப் பதிய, கழுத்தில் கைகளைக் கட்டிப் பிணித்து, அன்பு மிக்கு எழ,
  • விபுதர் அமுது என மது என அறு சுவை அபரிமிதம் என இலவ இதழ் முறை முறை துய்த்துக் களித்து நகம் வைத்துப் ப(ல்)லில் குறியின் வரையும் முறை செய்து
    தேவர்களின் அமுதம் எனவும், தேன் எனவும், ஆறு சுவைகளையும் அளவற்றுக் கொண்டது எனவும், இலவ மலரை ஒத்த செவ்விதழ் வாயூறலை பல முறை அனுபவித்து மகிழ்ந்து, நகக் குறிகளை பற்குறி வரையும் முறையிலே பதித்து,
  • முனிவரு(ம்) மன வலி கரையும் அரிசன(ம்) பரிசன(ம்) ப்ரிய உடை தொட்டுக் குலைத்து நுதல் பொட்டுப் படுத்தி மதர் விழிகள் குழை பொர மதி முகம் வெயர்வு எழ
    தவசிகளும் தமது மனத் திண்மை கரைந்து குலையுமாறு, மஞ்சள் பூசப்பட்ட இடங்களைத் தொட்டும், விருப்பத்துடன் அணிந்த ஆடையை தொட்டுக் குலைத்தும், நெற்றியில் உள்ள பொட்டை அழியச் செய்தும், செருக்கு உள்ள கண்கள் (காதில் உள்ள) குண்டலங்கள் வரையும் எட்டி முட்டி, நிலாப் போன்ற முகத்தில் வியர்வை உண்டாக,
  • மொழிகள் பதறிட ரதி பதி கலை வழி கற்றிட்ட புட் குரல் மிடற்றில் பயிற்றி மடு உந்தி மூழ்கிப் புகடு வெகு வித கரணமு(ம்) மருவிய வகையின்
    பேச்சு பதறி வர, ரதியின் கணவனாகிய மன்மதனுடைய காமசாஸ்திரத்தில் கூறியவாறு கற்றுள்ள புட்குரல்களை கண்டத்தில் பயில்வித்து, மடுவைப் போன்ற கொப்பூழில் முழுகி, புகட்டப்பட்ட பலவிதமான கலவித் தொழில்களை பொருந்திய முறைகளில் செய்து,
  • முகில் என இருள் என வனம் என ஒப்பித்த நெய்த்த பல புட்பக் குழல் சரிய அமுத நிலை மலர் அடி முதல் முடி கடை குமுத பதி கலை குறை கலை நிறை கலை சித்தத்து அழுத்தி அநுவர்க்கத்து உருக்கி
    கரு மேகம் என்றும், இருட்டு என்றும், காடு எனவும் ஒப்புமை கூறப்பட்டதும், நெய்ப் பளபளப்பு உள்ளதும், பல பூக்களை அணிந்துள்ளதுமான கூந்தல் சரிந்து விழ, அந்த இன்பகரமான நிலையை மலர் போன்ற பாதம் முதல் தலை வரையும், சந்திரனுடைய கலையில் தேய்பிறை முதல் வளர்பிறை வரை எப்போதும் மனத்தில் பதித்து, (அந்தச் சிற்றின்ப வழியையே) அனுசரித்து அதிலேயே மனம் உருகி,
  • ஒரு பொழுதும் விடல் அரிது எனும் அநுபவம் அவை முழுதும் ஒழி அற மருவிய கலவி இதத்து ப்ரியப்பட நடித்துத் துவட்சியினில் நைந்து சோர
    ஒரு பொழுதும் கூட அந்த வழியை விட்டு விலகுதல் முடியாது என்னும்படியான அனுபவமானது நீங்குதல் இல்லாத, பொருந்திய புணர்ச்சியில் இன்பகரமாய் ஆசையுடன் ஆட்டம் ஆடி, அந்தச் சோர்வினில் மனம் வாட்டம் அடைய,
  • புணரும் இது சிறு சுகம் என இகபரம் உணரும் அறிவிலி ப்ரமை தரு திரி மலம் அற்றுக் கருத்து ஒருமை உற்றுப் புலத் தலையில் மறுகு பொறி கழல் நிறுவியெ சிறிது மெய் உணர்வும் உணர்வு உற
    இந்தப் புணர்ச்சி இன்பம் அற்ப சுகம் என்று உணர்ந்து, இக பரத்தின் நன்மையையும் உணர்ந்திடும் அறிவு இல்லாத நான், மயக்கத்தைத் தரும் (ஆணவம், கன்மம், மாயை என்னும்) மும்மலங்களும் நீங்கப் பெற்று, எண்ணம் சிதறாமல் ஒருமைப் பட்டு, ஐம்புலன்களின் வாயிலில் அகப்பட்டு கலங்குகின்ற அறிவை உனது திருவடிகளில் நிலைக்கச் செய்து, சற்று உண்மை உணர்ச்சி அறிவில் ஏற்பட,
  • வழு அற ஒரு ஜக வித்தைக் குண த்ரயமும் நிர்த்தத்து வைத்து மறை புகலும் அநுபவ வடிவினை அளவு அறு அகில வெளியையும் ஒளியையும் அறி சிவ தத்வ ப்ரசித்தி தனை முத்திச் சிவக் கடலை என்று சேர்வேன்
    குற்றமெல்லாம் ஒழிய ஒப்பற்ற இவ்வுலக வித்தைகளையும், (சத்வ, ராஜச, தாமச குணங்களாகிய) முக்குணங்களையும் நான் ஆட்டுவித்தபடியே ஆட வைத்து, வேதங்கள் சொல்லுகின்ற அனுபோக உருவினை அளவு கடந்த முழுப் பெரு வெளியையும் ஒளியையும் அறியக் கூடிய சிவானுபவ உண்மைக் கீர்த்திப் பொருளை, முக்தி என்னும் சிவக் கடலை நான் என்று கூடுவேன்?
  • திகுட திகுகுட திகுகுட திகுகுட தகுட தகுகுட தகுகுட தகுகுட திக்குத்தி குத்திகுட தக்குத்த குத்தகுட டுமிட டுமிமிட டுமிமிட டுமிமிட டமட டமமட டமமட டமமட டுட்டுட்டு டுட்டுமிட டட்டட்ட டட்டமட திகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்தி தகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்தி திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி ...... என்று
    (இந்த தாள ஓசைக்கு ஏற்ப),
  • பேரி திமிலை கரடிகை பதலை ச(ல்)லரி தவில் தமர முரசுகள் குடமுழவொடு துடி சத்தக் கணப் பறைகள் மெத்தத் தொனித்து அதிர
    முரசும், ஒரு வகையான திமிலைப் பறையும், கரடி கத்துவது போன்ற பறையும், ஒரு வகையான மத்தளமும், சல் என்னும் ஓசை செய்யும் பறையும், மேளமும், தமரம் என்னும் பறைகளும், முழவு வாத்திய வகைகளோடு உடுக்கையும், தோல் கருவிப் பறைகளும் பேரொலி செய்து அதிர்ச்சியுறச் செய்ய,
  • அசுரர் குல அரி அமரர்கள் ஜய பதி குசல பசுபதி குரு என விருதுகள் ஒத்தத் திரள் பலவும் முற்றிக் கலிக்க
    அசுரர்கள் கூட்டத்துக்குப் பகைவன், தேவர்களின் வெற்றிச் சேனாபதி, நன்மையே தரும் சிவபெருமானுக்கு குருமூர்த்தி என்று வெற்றிச் சின்னங்கள் ஒரே கூட்டமாய் பலவும் நிரம்பி ஒலி செய்ய,
  • எழு சிகர கொடு முடி கிடுகிடுகிடு என மகர சல நிதி மொகுமொகுமொகு என எட்டுத் திசைக் களிறு மட்டற்று அறப் பிளிற நின்ற சேடன் மகுட சிரதலம் நெறுநெறுநெறு என அகில புவனமும் ஹர ஹர ஹர என
    எழுந்த பேரொலியினால் மலைகளின் உச்சிகள் எல்லாம் கிடுகிடுகிடு என்று அதிர, மகர மீன்கள் வாழும் கடல் மொகுமொகுமொகு என்று கலக்கம் அடைய, எட்டுத் திசைகளில் உள்ள யானைகள்* அளவு கடந்து கூச்சலிட, (உலகத்தைத் தாங்கி) நிற்கும் ஆதிசேஷனுடைய கிரீடங்களைக் கொண்ட தலைமுடிகள் நெறுநெறுநெறு என்று முறிய, உலகங்கள் யாவும் அரகர ஹர என்று ஒலி செய்ய,
  • நக்ஷத்ரம் உக்கி விழ வக்கிட்ட துட்ட குண நிருதர் தலை அற வடிவெனும் மலை சொரி குருதி அருவியின் முழுகிய கழுகுகள் பக்கப் பழுத்த உடல் செக்கச் சிவத்து விட
    நட்சத்திரங்கள் எல்லாம் உதிர்ந்து விழ, (பொறாமையால்) வேகுதல் போன்ற துஷ்ட குணங்களை உடைய அசுரர்களின் தலைகள் அற்று விழ, அவர்களுடைய மலை போன்ற உருவத்திலிருந்து சொரிகின்ற ரத்தமாகிய ஆற்றில் முழுகியதால் கழுகுகளின் புறமும் முதிர்ந்த உடலும் ஒரே சிவப்பு நிறமாக மாற,
  • வயிறு சரி குடல் நரி தி(ன்)ன நிணம் அவை எயிறு அலகைகள் நெடுகிய குறளிகள் பக்ஷித்து நிர்த்தமிட ரக்ஷித்தலைப் பரவி உம்பர் வாழ
    அசுரர்கள் வயிற்றிலிருந்து சரிந்த குடலை நரிகள் உண்ண, மாமிசத்தை பற்களை உடைய பேய்களும் நீண்ட பிசாசுகளும் உண்டு நடனம் செய்யும்படி நீ காப்பாற்றிய செயலைப் போற்றி தேவர்கள் வாழவும்,
  • மடிய அவுணர்கள் குரகத கஜ ரத கடகம் உடைபட வெடிபட எழு கிரி அற்றுப் பறக்க வெகு திக்குப் படி(ந்)து நவநதிகள் குழை தர இப பதி மகிழ்வுற அமர் செய்து அயில் கையில் வெயில் எழ மயில் மிசை
    அசுரர்கள் இறக்க, குதிரை, யானை, தேர், காலாட் படைகள் உடைந்து பிளவுபட, (சூரனுக்கு அரணாய் இருந்த) ஏழு மலைகளும் உருக் குலைந்து தூள் ஆக, பல திசைகளிலும் (அத்தூள்கள்) படிந்து ஒன்பது ஆறுகளும் குழைவு பெற, வெள்ளை யானையின் தலைவனாகிய இந்திரன் மகிழ்ச்சி உறவும் போர் செய்து, திருக்கையில் உள்ள வேலாயுதம் ஒளி வீச, மயிலின் மேல் விளங்கி,
  • அக் குக்குடக் கொடி செருக்கப் பெருக்கமுடன் வயலி நகர் உறை சரவணபவ குக இயலும் இசைகளு(ம்) நடனமும் வகை வகை சத்யப் படிக்கு இனிது அகஸ்தியர்க்கு உணர்த்தி அருள் தம்பிரானே.
    அந்தக் கோழிக் கொடியின் பெருமையுடன், செல்வ வளர்ச்சியுடன் வயலூரில்** வீற்றிருக்கும் சரவண பவனே, குகனே, இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் பிரிவு பிரிவாக உண்மையான முறையில் அகத்திய முனிவருக்கு இனிமையாகப் போதித்து அருளிய தம்பிரானே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com