தந்தன தானன ...... தனதான
அஞ்சன வேல்விழி ...... மடமாதர்
அங்கவர் மாயையி ...... லலைவேனோ
விஞ்சுறு மாவுன ...... தடிசேர
விம்பம தாயரு ...... ளருளாதோ
நஞ்சமு தாவுணு ...... மரனார்தம்
நல்கும ராவுமை ...... யருள்பாலா
தஞ்சென வாமடி ...... யவர்வாழத்
தஞ்சையில் மேவிய ...... பெருமாளே.
- அஞ்சனம் வேல் விழி மட மாதர் அங்கு அவர் மாயையில்
அலைவேனோ
மை பூசிய வேல் போன்ற கண்கள் உள்ள அழகிய விலைமாதர்களிடத்தில் மாயை மயக்கத்தில் அலைச்சல் உறுவேனோ? - விஞ்சுறுமா(று) உனது அடி சேர விம்பம் அதாய் அருள்
அருளாதோ
நான் மேம்பட்டு விளங்குமாறு உனது திருவடியில் சேர்வதற்கு ஒளி உருவமாக உனது திருவருள் எனக்கு அருளக் கூடாதோ? - நஞ்சு அமுதாய் உ(ண்)ணும் அரனார் தம் நல் குமரா உமை
அருள் பாலா
விஷத்தை அமுதமாக உண்ட சிவபெருமானுடைய நல்ல மகனே, உமாதேவி பெற்றருளிய பாலனே, - தஞ்ச(ம்) எனவாம் அடியவர் வாழ தஞ்சையில் மேவிய
பெருமாளே.
சரணம் நீயே எனக் கொண்டுள்ள அடியார்கள் வாழ தஞ்சையில் வீற்றிருக்கும் பெருமாளே.



