திருப்புகழ் 869 செனித்திடும் சலம் (கும்பகோணம்)

தனத்த தந்தன தானன தானன
தனத்த தந்தன தானன தானன
தனத்த தந்தன தானன தானன ...... தனதான
செனித்தி  டுஞ்சல  சாழலு  மூழலும் 
விளைத்தி  டுங்குடல்  பீறியு  மீறிய 
செருக்கொ  டுஞ்சதை  பீளையு  மீளையு  ......  முடலூடே 
தெளித்தி  டும்பல  சாதியும்  வாதியும் 
இரைத்தி  டுங்குல  மேசில  கால்படர் 
சினத்தி  டும்பவ  நோயென  வேயிதை  ......  யனைவோருங் 
கனைத்தி  டுங்கலி  காலமி  தோவென 
வெடுத்தி  டுஞ்சுடு  காடுபு  காவென 
கவிழ்த்தி  டுஞ்சட  மோபொடி  யாய்விடு  ......  முடல்பேணிக் 
கடுக்க  னுஞ்சில  பூடண  மாடைகள் 
இருக்கி  டுங்கலை  யேபல  வாசைகள் 
கழித்தி  டுஞ்சிவ  யோகமு  ஞானமு  ......  மருள்வாயே 
தனத்த  னந்தன  தானன  தானன 
திமித்தி  திந்திமி  தீதக  தோதக 
தகுத்து  துந்துமி  தாரைவி  ராணமொ  ......  டடல்பேரி 
சமர்த்த  மொன்றிய  தானவர்  சேனையை 
வளைத்து  வெஞ்சின  வேல்விடு  சேவக 
சமத்து  ணர்ந்திடு  மாதவர்  பாலருள்  ......  புரிவோனே 
தினைப்பு  னந்தனி  லேமய  லாலொரு 
மயிற்ப  தந்தனி  லேசர  ணானென 
திருப்பு  யந்தரு  மோகன  மானினை  ......  யணைவோனே 
சிவக்கொ  ழுஞ்சுட  ரேபர  னாகிய 
தவத்தில்  வந்தருள்  பாலக்ரு  பாகர 
திருக்கு  டந்தையில்  வாழ்முரு  காசுரர்  ......  பெருமாளே. 
  • செனித்திடும் சலம் சாழலும் ஊழலும்
    பிறப்பு என்கின்ற பொய்ம்மையோடு கூத்து விளையாட்டு போன்றவை என்ன, ஆபாசம் என்ன,
  • விளைத்திடும் குடல் பீறியும் மீறிய செருக்கொடும் சதை பீளையும் ஈளையும் உடலூடே
    பிறப்பால் ஏற்படும் குடல், அந்தக் குடலைக் கிழித்துக்கொண்டு எழுவது போல மேல் நோக்கி எழுகின்ற ஆணவம் என்ன, அந்த உடலில் உள்ள சதை, பீளை, கோழை முதலியவை என்ன,
  • தெளித்திடும் பல சாதியும் வாதியும்
    தோன்றியுள்ள பல சாதிகள் என்ன, அதைக் குறித்து வாதிப்பவர் என்ன,
  • இரைத்திடும் குலமே சில கால் படர் சினத்திடும் பவ நோயெனவே
    கூச்சலிட்டுப் பேசும் குலத்தவர் என்ன, சில சமயங்களில் துன்பம் கோபித்து எழுவது போல் பிறப்பு என்னும் நோய் என்றே
  • இதை அனைவோரும் கனைத்திடும் கலி காலம் இதோ என
    இவ்வாழ்வை எல்லோரும் ஒலித்து எழும் கலிகாலத்தின் கூத்தோ இது என்று கூறுவது என்ன,
  • எடுத்திடும் சுடு காடு புகா என கவிழ்த்திடும் சடமோ பொடியாய் விடும் உடல் பேணி
    (பிணத்தை) எடுங்கள், சுடு காட்டுக்குச் செல்லுங்கள் என்று கூறுவதும், (அங்கே போய் பாடையிலிருந்து) கவிழ்க்கப்பட்டதுமான உடல் சாம்பலாகிவிடும் இந்த உடம்பை நான் விரும்பிப் போற்றி,
  • கடுக்கனும் சில பூடணம் ஆடைகள் இருக்கிடும் கலையே பல ஆசைகள்
    (அவ்வுடலை அலங்கரிக்கக்) கடுக்கன் முதலிய சில அணிகலன்களை அணிவது என்ன, உடைகள் அணிவது என்ன, 'ரிக்கு' வேத மந்திரங்களால் பெறப்படும் சாஸ்திர நூல்களைப் படிப்பது என்ன,
  • கழித்திடும் சிவ யோகமும் ஞானமும் அருள்வாயே
    இவை யாவற்றையும் ஒழிக்க வல்ல சிவ யோகத்தையும் சிவ ஞானத்தையும் எனக்கு அருள்வாயாக.
  • தனத்த னந்தன தானன தானன திமித்தி திந்திமி தீதக தோதக தகுத்து துந்துமி
    (இதே ஒலியில்)
  • தாரை விராணமொடு அடல் பேரி
    தம்பட்டை, வீராணம் என்ற பெரிய பறை, வெற்றி முரசு இவைகளுடன்
  • சமர்த்தம் ஒன்றிய தானவர் சேனையை வளைத்து வெம் சினம் வேல் விடு சேவக
    போருக்குக் கூடி வந்த அசுரர்களுடைய சேனைகளை வளைத்து, கொடிய கோபம் கொண்டு வேலாயுதத்தைச் செலுத்திய வலிமை உள்ளவனே,
  • சமத்து உணர்ந்திடு மா தவர் பால் அருள் புரிவோனே
    உனது திறமையை தெரிந்துள்ள சிறந்த முனிவர்களுக்கு அருள் செய்பவனே,
  • தினைப் புனம் தனிலே மயலால் ஒரு மயில் பதம் தனிலே சரண் நான் என
    தினைப் புனத்தில் காதல் இச்சையால் ஒப்பற்ற மயில் போன்ற வள்ளியின் பாதத்தில் நான் அடைக்கலம் என்று நீ கூற,
  • திருப் புயம் தரு மோகன மானினை அணைவோனே
    தனது அழகிய புயங்களைத் உனக்குத் தந்த மோகனமான மானை ஒத்த வள்ளியை அணைபவனே,
  • சிவக் கொழும் சுடரே பரனாகிய தவத்தில் வந்தருள் பால க்ருபாகர
    சிவனிடத்தினின்றும் தோன்றிய செவ்விய சுடரே, தவம் செய்வோர் பொருட்டுப் பரனாகி வெளித் தோன்றி வந்து அருளும் குழந்தையே, கருணைத் தெய்வமே,
  • திருக் குடந்தையில் வாழ் முருகா சுரர் பெருமாளே.
    கும்பகோணத்தில் வாழும் முருகனே, தேவர்களின் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com