தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
கூசா தேபா ரேசா தேமால்
கூறா நூல்கற் ...... றுளம்வேறு
கோடா தேவேல் பாடா தேமால்
கூர்கூ தாளத் ...... தொடைதோளில்
வீசா தேபேர் பேசா தேசீர்
வேதா தீதக் ...... கழல்மீதே
வீழா தேபோய் நாயேன் வாணாள்
வீணே போகத் ...... தகுமோதான்
நேசா வானோ ரீசா வாமா
நீபா கானப் ...... புனமானை
நேர்வா யார்வாய் சூர்வாய் சார்வாய்
நீள்கார் சூழ்கற் ...... பகசாலத்
தேசா தீனா தீனா ரீசா
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே.
- கூசாதே பார் ஏசாதே
நான் நாணம் கொள்ளாமல், உலகத்தோர் என்னைப் பழிக்காமல், - மால் கூறா நூல்கற்று
உன் பெருமையைக் கூறாத அசட்டு நூல்களைக் கற்று - உளம்வேறு கோடாதே
என் உள்ளம் மாறுபட்டு கோணல் வழியைப் பின்பற்றாமல், - வேல் பாடாதே
உன் வேலாயுதத்தை நான் பாடாமலும், - மால் கூர் கூதாளத் தொடைதோளில் வீசாதே
ஆசை மிகுந்து கூதாள மலர்மாலையை உன் தோள்களில் வீசாமலும், - பேர் பேசாதே
உன் புகழைப் பற்றி நான் பேசாமலும், - சீர் வேத அதீதக் கழல்மீதே வீழாதே
சிறப்பான வேதங்களுக்கும் எட்டாத உன் திருவடிகளில் வீழாமலும், - போய் நாயேன் வாணாள் வீணே போகத் தகுமோதான்
அலைந்து போய், நாயைவிடக் கீழோனான அடியேனுடைய வாழ்நாள் வீணாகப் போவது நீதியாகுமோ? - நேசா வானோர் ஈசா வாமா
அன்பனே, தேவர்களின் தெய்வமே, அழகனே, - நீபா கானப் புனமானை நேர்வாய் ஆர்வாய்
கடப்பமாலையை அணிந்தவனே, காட்டில் தினைப்புனத்தில் உள்ள மான்போன்ற வள்ளியைச் சந்தித்தவனே, உள்ளம் குளிர்ந்தவனே, - சூர்வாய் சார்வாய்
சூரன் இருக்கும் மகேந்திரபுரியைச் சென்றடைந்து போர்செய்தவனே, - நீள்கார் சூழ்கற்பகசாலத் தேச ஆதீனா
பெரிய மேகங்கள் சூழ்ந்த கற்பகத் தருக்கள் நிறைந்துள்ள தேசமாகிய தேவலோகத்துக்கு உரிமையாளனே, - தீனார் ஈசா
அனாதைகளின் ரட்சகக் கடவுளே, - சீர் ஆரூரிற் பெருவாழ்வே
சிறப்பு வாய்ந்த திருவாரூரில்* வீற்றிருக்கும் பெரும் செல்வமே, - சேயே வேளே பூவே கோவே
சிவப்பு நிறத்தோனே, முருகவேளே, மிக்க பொலிவுள்ளவனே, தலைவனே, தேவே தேவப் பெருமாளே.



