திருப்புகழ் 814 சித்தி ரத்திலுமி (திருவிற்குடி)

தத்த தத்ததன தத்த தத்ததன
தத்த தத்ததன தத்த தத்ததன
தத்த தத்ததன தத்த தத்ததன ...... தந்ததான
சித்தி  ரத்திலுமி  குத்த  பொற்பவள 
மொத்த  மெத்தஅழ  குற்ற  குத்துமுலை 
சிற்ப  சிற்பமயி  ரொத்த  சிற்றிடைய  ......  வஞ்சிமாதர் 
சித்த  மத்தனையு  முற்ற  ளப்பகடல் 
மொய்த்த  சிற்றுமண  லுக்கு  மெட்டியது 
சிக்கு  மைக்குழல்கள்  கஸ்து  ரிப்பரிம  ......  ளங்கள்வீசப் 
பத்தி  ரத்திலுமி  குத்த  கட்கயல்கள் 
வித்து  ருத்தநுவ  ளைத்த  நெற்றிவனை 
பற்க  ளைப்பளிரெ  னச்சி  ரித்துமயல்  ......  விஞ்சைபேசிப் 
பச்சை  ரத்நமயி  லைப்பொ  லத்தெருவி 
லத்தி  யொத்தமத  மொத்து  நிற்பர்வலை 
பட்டு  ழைத்துகுழி  யுற்ற  அத்தியென  ......  மங்குவேனோ 
தத்த  னத்தனத  னத்த  னத்தனன 
தித்தி  மித்திமிதி  மித்தி  மித்திமித 
தக்கு  டுக்குடுடு  டுக்கு  டுக்குடென  ......  சங்குபேரி 
சத்த  முற்றுகடல்  திக்கு  லக்கிரிகள் 
நெக்கு  விட்டுமுகி  லுக்கு  சர்ப்பமுடி 
சக்கு  முக்கிவிட  கட்க  துட்டசுர  ......  ரங்கமாள 
வெற்றி  யுற்றகதிர்  பத்தி  ரத்தையரு 
ளிச்சு  ரர்க்கதிப  திப்ப  தத்தையுறு 
வித்த  ளித்தமதி  பெற்ற  தத்தைமண  ......  முண்டவேலா 
வெட்கி  டப்பிரம  னைப்பி  டித்துமுடி 
யைக்கு  லைத்துசிறை  வைத்து  முத்தர்புகழ் 
விற்கு  டிப்பதியி  லிச்சை  யுற்றுமகிழ்  ......  தம்பிரானே. 
  • சித்திரத்திலும் மிகுத்த பொன் பவளம் ஒத்த மெத்த அழகு உற்ற குத்து முலை
    சித்திரத்தில் காணப்படுவதை விட சிறப்பை உடையதாகவும், பொன்னிறம் பவள நிறம் உடையதாகவும், மிக அழகும் திரட்சியும் உடையதுமான மார்பகங்களையும்,
  • சிற்ப சிற்பம் மயிர் ஒத்த சிற்றிடைய வஞ்சி மாதர் சித்தம் அத்தனையும் உற்று அளப்ப கடல் மொய்த்த சிற்று மணலுக்கும் எட்டியது
    மிக நுண்ணியதான மயிரிழை போன்று மெல்லிய சிறிய இடையையும் கொண்ட வஞ்சிக் கொடி போன்ற விலைமாதர்களுடைய உள்ளம் அத்தனையும் முழுமையும் அளந்தால், அது கடலில் மொய்த்துள்ள சிறு மணல் அளவையும் எட்டத் தக்கதாகும்.
  • சிக்கு மை குழல்கள் கஸ்துரிப் பரிமளங்கள் வீசப் பத்திரத்திலு(ம்) மிகுத்த கண் கயல்கள் வித்துருத் தநு வளைத்த நெற்றி
    அந்த மாதர்கள் சிக்குள்ள தங்கள் கரிய கூந்தல்கள் கஸ்தூரி வாசனை வீச, வாளினும் மிக்க கூரிய கண்களாகிய கயல் மீன்கள் மின்னல் போல் ஒளி விடுவதாய், வில்லை வளைத்தது போன்ற நெற்றி
  • வனை பற்களைப் பளிர் எனச் சிரித்து மயல் விஞ்சை பேசிப் பச்சை ரத்ந மயிலைப் பொலத் தெருவில் அத்தி ஒத்த மதம் ஒத்து நிற்பர்
    இவைகளுடன் உரு அமைந்த பற்களைப் பளீரென்று நகைத்துக் காட்டி, காமத்தை ஊட்டும் மாய வித்தைப் பேச்சுக்களைப் பேசி, பச்சை மரகத மயிலைப் போல, வீதியில், யானைக்கு உற்ற மதம் போன்று, மதத்துடன் நிற்பார்கள்.
  • வலை பட்டு உழைத்து குழி உற்ற அத்தி என மங்குவேனோ
    இத்தகைய விலைமாதர்களின் வலையில் விழுந்து உழைத்து, படு குழியில் விழுந்த யானையைப் போல மனம் குலைந்து நிற்பேனோ?
  • தத்த னத்தனத னத்த னத்தனன தித்தி மித்திமிதி மித்தி மித்திமித தக்கு டுக்குடுடு டுக்கு டுக்குடு என சங்கு பேரி சத்தம் உற்று
    (இதே தாளத்தில்) சங்கும், முரசும் ஒலி செய்து,
  • கடல் திக்குலக் கிரிகள் நெக்கு விட்டு முகிலுக்கு சர்ப்ப முடி சக்கு முக்கி விட கட்க(ம்) துட்ட அசுரர் அங்கம் மாள
    கடலும் திக்குகளில் உள்ள சிறந்த (எட்டு) மலைகளும் நெகிழ்ந்து கட்டு விட, மேக இடியைக் கேட்டு ஆதிசேஷனது முடிகளும் கண்களும் துன்பம் அடைய, வாள் ஏந்திய துஷ்டராகிய அசுரர்களின் உடலின் அங்கங்கள் வெட்டுப்பட,
  • வெற்றி உற்ற கதிர் பத்திரத்தை அருளிச் சுரர்க்கு அதிபதிப் பதத்தை உறுவித்து அளித்து மதி பெற்ற தத்தை மணம் உண்ட வேலா
    வெற்றி கொண்ட ஒளி வேலாயுதத்தைச் செலுத்தி, தேவர்களின் தலைமையான நிலையை மீண்டும் அடையும்படி அருள் செய்து, யானையாகிய ஐராவதம் வளர்த்த கிளி போன்ற தேவயானையைத் திருமணம் செய்து கொண்ட வேலனே,
  • வெட்கிடப் பிரமனைப் பிடித்து முடியைக் குலைத்து சிறை வைத்து முத்தர் புகழ் விற் குடிப் பதியில் இச்சை உற்று மகிழ் தம்பிரானே.
    வெட்கப்படும்படி பிரமனைப் பிடித்து, அவன் குடுமியை அலைவித்து, அவனைச் சிறையிலிட்டு, ஜீவன் முக்தர்களாகிய பெரியோர்கள் புகழ்கின்ற திருவிற்குடி* என்னும் தலத்தில் ஆசை பூண்டு மகிழ்கின்ற தம்பிரானே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com