தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
தனனத் தனன தந்த ...... தனதான
பனகப் படமி சைந்த முழையிற் றரள நின்று
படர்பொற் பணிபு னைந்த ...... முலைமீதிற்
பரிவற் றெரியு நெஞ்சில் முகிலிற் கரிய கொண்டை
படுபுட் பவன முன்றி ...... லியலாரும்
அனமொத் திடுசி றந்த நடையிற் கிளியி னின்சொல்
அழகிற் றனித ளர்ந்து ...... மதிமோக
மளவிப் புளக கொங்கை குழையத் தழுவி யின்ப
அலையிற் றிரிவ னென்று ...... மறிவேனோ
தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
தனனத் தனன தந்த ...... தனதானா
தகிடத் தகிட தந்த திமிதத் திமித வென்று
தனிமத் தளமு ழங்க ...... வருவோனே
செநெனற் கழனி பொங்கி திமிலக் கமல மண்டி
செறிநற் கழைதி ரண்டு ...... வளமேவித்
திருநற் சிகரி துங்க வரையைப் பெருவு கின்ற
திலதைப் பதிய மர்ந்த ...... பெருமாளே.
- ப(ன்)னகப் படம் இசைந்த முழையில் தரள(ம்) நின்று படர்
பொன் பணி புனைந்த முலை மீதே
பாம்பின் படம் போன்ற படம் உள்ள குகை போன்ற பெண்குறியிலும், முத்து மணி நின்று அசைந்து உலவும் அழகிய ஆபரணங்களைப் பூண்டுள்ள மார்பகத்தின் மேலும், - பரிவு அற்று எரியு(ம்) நெஞ்சில் முகிலின் கரிய கொண்டை
படு புள் பவன(ம்) முன்றில் இயல் ஆரும் அ(ன்)னம் ஒத்திடு
சிறந்த நடையில் கிளியின் இன் சொல் அழகில் தனி
தளர்ந்தும்
உண்மை அன்பு இல்லாமல் (பொருள் வேண்டியே) எரிச்சல் படும் (வேசியர்) உள்ளத்திலும், மேகம் போன்ற கரு நிறம் கொண்ட கூந்தலிலும், (எட்டுப் பறவைகள் செய்யும்) புட்குரல்களுக்கு இருப்பிடமான கழுத்திலும், தகுதி நிறைந்துள்ள அன்ன நடைக்கு ஒப்பான சிறந்த நடையிலும், கிளியின் இனிய மொழிக்கு ஒப்பான சொல்லிலும், நான் தனித்து நின்று சிந்தித்துத் தளர்ந்தும், - அதி மோகம் அளவிப் புளக கொங்கை குழையத் தழுவி இன்ப
அலையில் திரிவன் என்றும் அறிவேனோ
காம இச்சையில் மனம் கொண்டு புளகம் கொண்ட மார்பகங்களை குழையும்படியாகத் தழுவி சிற்றின்பக் கடலில் அலைத்துச் செல்கின்றவனாகிய நான் என்றேனும், எப்போதாவது அறிந்து உய்வேனோ? - தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
தனனத் தனன தந்த ...... தனதானா
தகிடத் தகிட தந்த திமிதத் திமித என்று
தனி மத்தளம் முழங்க வருவோனே
(இதே தாளத்தில்) தனியாக மத்தளம் ஒலிக்க வருபவனே, - செ(ம்) நெ(ல்) நற் கழனி பொங்கி திமிலக் கமலம் அண்டி
செறி நல் கழை திரண்டு வளம் மேவி திரு நல் சிகரி துங்க
வரையைப் பொருவுகின்ற திலதைப்பதி அமர்ந்த
பெருமாளே.
செம்மையான நெற்பயிர் விளையும் நல்ல வயல்கள் செழிப்புற்று ஓங்கி, பெரிய மீன்களும் தாமரையும் நிறைந்து, நெருங்கிய நல்ல கரும்புகளும் திரட்சியாக வளர்ந்து வளப்பம் உற்று, அழகிய சிகரங்களை உடைய, உயர்ந்த மலைக்கு நிகராக விளங்கும் திலதைப் பதி** என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.