திருப்புகழ் 584 சரவண ஜாதா (விநாயகமலை-பிள்ளையார்பட்டி)

தனதன தானா தனாதன தனதன தானா தனாதன
தனதன தானா தனாதன ...... தனதான
சரவண  ஜாதா  நமோநம  கருணைய  தீதா  நமோநம 
சததள  பாதா  நமோநம  ......  அபிராம 
தருணக  தீரா  நமோநம  நிருபமர்  வீரா  நமோநம 
சமதள  வூரா  நமோநம  ......  ஜகதீச 
பரம  சொரூபா  நமோநம  சுரர்பதி  பூபா  நமோநம 
பரிமள  நீபா  நமோநம  ......  உமைகாளி 
பகவதி  பாலா  நமோநம  இகபர  மூலா  நமோநம 
பவுருஷ  சீலா  நமோநம  ......  அருள்தாராய் 
இரவியு  மாகாச  பூமியும்  விரவிய  தூளேற  வானவ 
ரெவர்களு  மீடேற  ஏழ்கடல்  ......  முறையோவென் 
றிடர்பட  மாமேரு  பூதர  மிடிபட  வேதா  னிசாசர 
ரிகல்கெட  மாவேக  நீடயில்  ......  விடுவோனே 
மரகத  ஆகார  ஆயனு  மிரணிய  ஆகார  வேதனும் 
வசுவெனு  மாகார  ஈசனு  ......  மடிபேண 
மயிலுறை  வாழ்வே  விநாயக  மலையுறை  வேலா  மகீதர 
வனசர  ராதார  மாகிய  ......  பெருமாளே. 
  • சரவண ஜாதா நமோநம
    நாணல் வனம் சூழ்ந்த பொய்கையில் அவதரித்தவனே, போற்றி போற்றி,
  • கருணை அதீதா நமோநம
    கருணை எல்லை கடந்த பொருளே, போற்றி போற்றி,
  • சததள பாதா நமோநம
    நூறு இதழ்கள் கொண்ட தாமரை போன்ற திருவடி உடையவனே, போற்றி போற்றி,
  • அபிராம
    மிக்க பேரழகு கொண்டவனே,
  • தருணக தீரா நமோநம
    இளமையும் தைரியமும் உடையவனே, போற்றி போற்றி,
  • நிருப அமர் வீரா நமோநம
    தலைமைச் சேனாதிபதியாகிய போர் வீரனே, போற்றி போற்றி,
  • சமதள வூரா நமோநம
    போருக்குரிய சேனைகள் உள்ள ஊராகிய திருப்போரூரானே, போற்றி போற்றி,
  • ஜகதீச
    உலகங்கள் அனைத்திற்கும் இறைவனே,
  • பரம சொரூபா நமோநம
    உயர்ந்த ஞான வடிவு கொண்டவனே, போற்றி போற்றி,
  • சுரர்பதி பூபா நமோநம
    தேவர்கள் தலைவனாம் இந்திரனுக்கும் அரசனே, போற்றி போற்றி,
  • பரிமள நீபா நமோநம
    நறுமணம் வீசும் கடம்பமாலையை அணிந்தவனே, போற்றி போற்றி,
  • உமைகாளி பகவதி பாலா நமோநம
    உமை, காளி, பகவதி எனப்படும் பார்வதி மைந்தா, போற்றி போற்றி,
  • இகபர மூலா நமோநம
    இம்மைக்கும் மறுமைக்கும் மூலகாரணமாக இருப்பவனே, போற்றி போற்றி,
  • பவுருஷ சீலா நமோநம
    ஆண்மையும் குணநலன்களும் உடையவனே, போற்றி போற்றி,
  • அருள்தாராய்
    உன் திருவருளைத் தந்தருள்வாயாக.
  • இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூளேற
    சூரிய மண்டலமும், ஆகாயமண்டலமும், பூமியும் தூசுகள் கலந்து படிந்து மறையுமாறும்,
  • வானவர் எவர்களும் ஈடேற
    தேவர்கள் அனைவரும் உய்ந்து உயர் பதவி அடையுமாறும்,
  • ஏழ்கடல் முறையோவென்று இடர்பட்
    ஏழு சமுத்திரங்களும் துன்புற்று இது முறையோ என்று கதறவும்,
  • மாமேரு பூதர மிடிபடவேதான்
    பெரிய மேருமலை இடிபட்டு பொடிபடவும்,
  • நிசாசரர் இகல்கெட
    இரவிலே அலையும் அசுரர்கள் தங்கள் வலிமை கெடவும்,
  • மாவேக நீ(டு) அயில் விடுவோனே
    வெகு வேகமாக நீண்ட வேலாயுதத்தை விடுத்தருளியவனே,
  • மரகத ஆகார ஆயனும்
    மரகதப் பச்சை நிறம்கொண்ட ஆயர்குலக் கொழுந்தாகிய திருமாலும்,
  • இரணிய ஆகார வேதனும்
    பொன்னிறம் கொண்ட பிரம்ம தேவனும்,
  • வசுவெனும் ஆகார ஈசனும் அடிபேண
    நெருப்பு நிறத்தை உடைய ருத்திர மூர்த்தியும் திருவடியைப் போற்ற
  • மயிலுறை வாழ்வே
    மயில் வாகனத்தில் எழுந்தருளி வரும் இறைவனே,
  • விநாயக மலையுறை வேலா
    விநாயக மலை (பிள்ளையார்பட்டி) யில் வாழும் வேலாயுதக் கடவுளே,
  • மகீதர வனசரர் ஆதாரமாகிய பெருமாளே.
    மலைகளில் வசிக்கும் காட்டு வேடர்களுக்கு ஆதாரமான பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com