திருப்புகழ் 567 பத்தியால் யானுனை (இரத்னகிரி)

தத்தனா தானனத் ...... தனதான
தத்தனா தானனத் ...... தனதான
பத்தியால்  யானுனைப்  ......  பலகாலும் 
பற்றியே  மாதிருப்  ......  புகழ்பாடி 
முத்தனா  மாறெனைப்  ......  பெருவாழ்வின் 
முத்தியே  சேர்வதற்  ......  கருள்வாயே 
உத்தமா  தானசற்  ......  குணர்நேயா 
ஒப்பிலா  மாமணிக்  ......  கிரிவாசா 
வித்தகா  ஞானசத்  ......  திநிபாதா 
வெற்றிவே  லாயுதப்  ......  பெருமாளே. 
  • பத்தியால் யானுனை
    அன்பினால் உன்னை உறுதியாக
  • பலகாலும் பற்றியே
    பல நாட்களாக விடாது பற்றிக்கொண்டு
  • மாதிருப்புகழ் பாடி
    உயர்ந்த திருப்புகழைப் பாடி
  • முத்தனாம் ஆறெனை
    ஜீவன் முக்தனாகும் வழியிலே என்னை
  • பெருவாழ்வின் முத்தியே
    இடையறா இன்ப வாழ்வாம் சிவகதியை
  • சேர்வதற்கு அருள்வாயே
    சேர்ந்து உய்வதற்கு திருவருள் புரிவாயாக
  • உத்தம அதான
    உத்தம குணங்களைப் பற்றிக்கொண்டுள்ள
  • சற் குணர்நேயா
    நல்ல இயல்புள்ளவர்களின் நண்பனே
  • ஒப்பிலா மா
    சமானம் இல்லாத பெருமை பொருந்திய
  • மணிக்கிரிவாசா
    ரத்னகிரியில் வாழ்பவனே*
  • வித்தகா
    பேரறிவாளனே
  • ஞானசத்தி நிபாதா
    திருவருள் ஞானத்தைப் பதியச் செய்பவனே
  • வெற்றிவே லாயுதப் பெருமாளே.
    வெற்றியைத் தரும் வேலை ஆயுதமாகக் கொண்ட பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com