திருப்புகழ் 563 குடத்தைத் தகர்த்து (திருக்கற்குடி)

தனத்தத் தனத்தத் தனத்தத் தனத்தத்
தனத்தத் தனத்தத் ...... தனதான
குடத்தைத்  தகர்த்துக்  களிற்றைத்  துரத்திக் 
குவட்டைச்  செறுத்துக்  ......  ககசாலக் 
குலத்தைக்  குமைத்துப்  பகட்டிச்  செருக்கிக் 
குருத்தத்  துவத்துத்  ......  தவர்சோரப் 
புடைத்துப்  பணைத்துப்  பெருக்கக்  கதித்துப் 
புறப்பட்  டகச்சுத்  ......  தனமாதர் 
புணர்ச்சிச்  சமுத்ரத்  திளைப்பற்  றிருக்கப் 
புரித்துப்  பதத்தைத்  ......  தருவாயே 
கடத்துப்  புனத்துக்  குறத்திக்  குமெத்தக் 
கருத்திச்  சையுற்றுப்  ......  பரிவாகக் 
கனக்கப்  ரியப்பட்  டகப்பட்  டுமைக்கட் 
கடைப்பட்  டுநிற்கைக்  ......  குரியோனே 
தடத்துற்  பவித்துச்  சுவர்க்கத்  தலத்தைத் 
தழைப்பித்  தகொற்றத்  ......  தனிவேலா 
தமிழ்க்குக்  கவிக்குப்  புகழ்ச்செய்ப்  பதிக்குத் 
தருக்கற்  குடிக்குப்  ......  பெருமாளே. 
  • குடத்தைத் தகர்த்துக் களிற்றைத் துரத்திக் குவட்டைச் செறுத்து
    குடத்துக்கு (ஒப்பிடலாம் என்றால்) குடத்தை நொறுங்க உடையச் செய்தும், யானைக்கு (ஒப்பிடலாம் என்றால்) யானையைக் காட்டில் துரத்தியும், மலைக்கு (ஒப்பிடலாம் என்றால்) மலை குறுகி அடங்கியும்,
  • ககசாலக் குலத்தைக் குமைத்துப் பகட்டிச் செருக்கி
    சக்ரவாகப் பட்சிகளின் கூட்டத்தின் குலத்துக்கு (ஒப்பிடலாம் என்றால்) (அந்தப் பட்சிகளை) வெட்கப்பட வைத்தும், ஆடம்பரம் காட்டி, அகந்தை பூண்டு,
  • குருத் தத்துவத்துத் தவர் சோரப் புடைத்துப் பணைத்துப் பெருக்கக் கதித்துப் புறப்பட்ட கச்சுத் தனமாதர்
    குருவின் நிலையிலிருந்து அறிவுரைகளை எடுத்து ஓதும் தவசிகளும் சோர்ந்து மயங்கும்படி, பருத்து, செழிப்புற்று, மிகவும் எழுச்சியுற்று வெளித் தோன்றுவதும் கச்சு அணிந்ததுமான மார்பகங்களை உடைய விலைமாதர்களின்
  • புணர்ச்சிச் சமுத்ரத்து இளைப்பு அற்றிருக்கப் புரித்துப் பதத்தைத் தருவாயே
    கலவி என்னும் கடலில் ஊடாடுதல் நீங்கி இருக்க அருள் செய்து உன் திருவடியைத் தருவாயாக.
  • கடத்துப் புனத்துக் குறத்திக்கு மெத்தக் கருத்து இச்சையுற்றுப் பரிவாகக் கனக்க ப்ரியப்பட்டு அகப்பட்டு மைக்கண் கடைப்பட்டு நிற்கைக்கு உரியோனே
    காட்டில் தினைப் புனத்தில் இருந்த குறத்தி வள்ளியின் மேல் மிக்க ஆசை மனத்தில் கொண்டு, அன்புடனே மிகவும் காதல் பூண்டு, மை அணியப்பட்ட அவளுடைய கடைக் கண்ணில் வசப்பட்டு நிற்பதற்கு ஆளானவனே,
  • தடத்து உற்பவித்துச் சுவர்க்கத் தலத்தைத் தழைப்பித்த கொற்றத் தனிவேலா
    (சரவண) மடுவில் தோன்றி, பொன்னுலகை வாழ்வித்த வீரம் பொருந்திய ஒப்பற்ற வேலனே,
  • தமிழ்க்குக் கவிக்குப் புகழ்ச்செய்ப் பதிக்குத் தருக் கற்குடிக்குப் பெருமாளே.
    தமிழ்ப் பெருமாளே, கவி ராஜப் பெருமாளே, புகழப்படும் வயலூர் என்ற தலத்துப் பெருமாளே, மரங்கள் நிறைந்த திருக்கற்குடியில்* வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com