திருப்புகழ் 561 வாசித்து (திருசிராப்பள்ளி)

தானத்தத் தான தானன தானத்தத் தான தானன
தானத்தத் தான தானன ...... தந்ததான
வாசித்துக்  காணொ  ணாதது  பூசித்துக்  கூடொ  ணாதது 
வாய்விட்டுப்  பேசொ  ணாதது  ......  நெஞ்சினாலே 
மாசர்க்குத்  தோணொ  ணாதது  நேசர்க்குப்  பேரொ  ணாதது 
மாயைக்குச்  சூழொ  ணாதது  ......  விந்துநாத 
ஓசைக்குத்  தூர  மானது  மாகத்துக்  கீற  தானது 
லோகத்துக்  காதி  யானது  ......  கண்டுநாயேன் 
யோகத்தைச்  சேரு  மாறுமெய்ஞ்  ஞானத்தைப்  போதி  யாயினி 
யூனத்தைப்  போடி  டாதும  ......  யங்கலாமோ 
ஆசைப்பட்  டேனல்  காவல்செய்  வேடிச்சிக்  காக  மாமய 
லாகிப்பொற்  பாத  மேபணி  ......  கந்தவேளே 
ஆலித்துச்  சேல்கள்  பாய்வய  லூரத்திற்  காள  மோடட 
ராரத்தைப்  பூண்ம  யூரது  ......  ரங்கவீரா 
நாசிக்குட்  ப்ராண  வாயுவை  ரேசித்தெட்  டாத  யோகிகள் 
நாடிற்றுக்  காணொ  ணாதென  ......  நின்றநாதா 
நாகத்துச்  சாகை  போயுயர்  மேகத்தைச்  சேர்சி  ராமலை 
நாதர்க்குச்  சாமி  யேசுரர்  ......  தம்பிரானே. 
  • வாசித்துக் காணொ ணாதது
    நூல்களைக் கற்று கலையறிவால் காணமுடியாததும்,
  • பூசித்துக் கூடொ ணாதது
    பூஜை செய்து கிரியாமார்க்கத்தால் அடைதற்கு அரியதும்,
  • வாய்விட்டுப் பேசொ ணாதது
    வாக்கினால் இத்தன்மைத்து எனப் பேசமுடியாததும்,
  • நெஞ்சினாலே மாசர்க்குத் தோணொ ணாதது
    உள்ளத்தில் குற்றமுடையோருக்குத் தோன்றி விளங்காததுவும்,
  • நேசர்க்குப் பேரொ ணாதது
    அன்பு செய்தார் நெஞ்சினின்றும் நீங்காது நிற்பதுவும்,
  • மாயைக்குச் சூழொ ணாதது
    மாயையினால் சூழமுடியாததும்,
  • விந்துநாத ஓசைக்குத் தூர மானது
    விந்து (சக்தி) சுழல அதனின்று எழும் நாதம் (சிவம்) என்னும் ஓசைக்கு அப்பால் வெகு தூரத்தில் இருப்பதுவும்,
  • மாகத்துக் கீற தானது
    ஆகாயத்திற்கு முடிவிலே இருப்பதுவும்,
  • லோகத்துக் காதி யானது
    இவ்வுலகத்திற்கு ஆதியானதுவும் ஆகிய மெய்ப்பொருளை,
  • கண்டுநாயேன்
    உள்ளக் கண்களால் நாயேன் கண்டு,
  • யோகத்தைச் சேரு மாறு
    சிவயோகத்தை அடையுமாறு
  • மெய்ஞ் ஞானத்தைப் போதி யாய்
    உண்மை அறிவை நீ உபதேசித்து அருள்வாய்.
  • இனி யூனத்தைப் போடி டாது
    இனி யான் இந்த உடம்பை வெறுத்து ஒதுக்காது
  • மயங்கலாமோ
    மாயை வசப்படலாமோ?
  • ஆசைப்பட்டு ஏனல் காவல்செய்
    நீயே மிக விரும்பி, தினைப்புனம் காவல் செய்த
  • வேடிச்சிக் காக மாமயலாகி
    வேட்டுவப் பெண் வள்ளிக்காக பெரிதும் மயங்கி,
  • பொற் பாத மேபணி கந்தவேளே
    பொன் போல் ஒளிரும் அவள் பாதத்தில் வீழ்ந்து வணங்கிய கந்தக் கடவுளே.
  • ஆலித்துச் சேல்கள் பாய்
    ஆரவாரித்து சேல்மீன்கள் பாய்ந்து விளையாடுகின்ற
  • வய லூரத்தில்
    வயலூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி,
  • காள மோடு அடர் ஆரத்தைப் பூண்
    விஷம் நிறைந்த பாம்பை மாலையாகப் பூண்ட
  • ம யூர துரங்கவீரா
    மயிலாகிய குதிரை மீது பவனிவரும் வீரனே,
  • நாசிக்குட் ப்ராண வாயுவை
    நாசியின் வழியாக பிராணவாயுவை
  • ரேசித்தெட் டாத யோகிகள்
    வெளியேவிட்டு, மீண்டும் பூரகம் செய்து ஹஸ்ராரப் பெருவெளியை* எட்டமுடியாத தவயோகிகள்
  • நாடிற்றுக் காணொ ணாதென
    எத்தனை விரும்பியும் காணமுடியாதபடி
  • நின்றநாதா
    (அப்பாலுக்கு அப்பாலாய்) நின்ற தலைவனே,
  • நாகத்துச் சாகை போய்
    மலையின் கிளைச் சிகரம் வளர்ந்து சென்று
  • உயர் மேகத்தைச் சேர் சிராமலை
    உயர்ந்த மேகமண்டலத்தைச் சேரும் திரிசிராமலையில்
  • நாதர்க்குச் சாமி யே
    எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு குருஸ்வாமியே,
  • சுரர் தம்பிரானே.
    தேவர்களுக்குத் தலைவனே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com