திருப்புகழ் · 529வரிசேர்ந்திடு (திருவேங்கடம்)

varisErndhidu

தனதாந்தன தானன தானன
தனதாந்தன தானன தானன
தனதாந்தன தானன தானன ...... தனதான
வரிசேர்ந்திடு சேல்கய லோவெனு
முழைவார்ந்திடு வேலையு நீலமும்
வடுவாங்கிடு வாள்விழி மாதர்கள் ...... வலையாலே
வளர்கோங்கிள மாமுகை யாகிய
தனவாஞ்சையி லேமுக மாயையில்
வளமாந்தளிர் போல்நிற மாகிய ...... வடிவாலே
இருள்போன்றிடு வார்குழல் நீழலில்
மயல்சேர்ந்திடு பாயலின் மீதுற
இனிதாங்கனி வாயமு தூறல்கள் ...... பருகாமே
எனதாந்தன தானவை போயற
மலமாங்கடு மோகவி காரமு
மிவைநீங்கிட வேயிரு தாளினை ...... யருள்வாயே
கரிவாம்பரி தேர்திரள் சேனையு
முடனாந்துரி யோதன னாதிகள்
களமாண்டிட வேயொரு பாரத ...... மதிலேகிக்
கனபாண்டவர் தேர்தனி லேயெழு
பரிதூண்டிய சாரதி யாகிய
கதிரோங்கிய நேமிய னாமரி ...... ரகுராமன்
திரைநீண்டிரை வாரியும் வாலியும்
நெடிதோங்கும ராமர மேழொடு
தெசமாஞ்சிர ராவண னார்முடி ...... பொடியாகச்
சிலைவாங்கிய நாரண னார்மரு
மகனாங்குக னேபொழில் சூழ்தரு
திருவேங்கட மாமலை மேவிய ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • வரிசேர்ந்திடு சேல்கயலோவெனும்
    செவ்வரி படர்ந்த சேல் மீனோ, கயல் மீனோ என்று சொல்லத்தக்கதும்,
  • உழைவார்ந்திடு வேலையு நீலமும்
    மானையும், வார்த்தெடுக்கப்பட்ட வேலையும், நீலோத்பல மலரையும்,
  • வடுவாங்கிடு வாள்விழி மாதர்கள் வலையாலே
    மாம்பிஞ்சினையும் நிகர்த்த கண்களை உடைய மாதர்களின் காம வலையினாலும்,
  • வளர்கோங்கிள மாமுகை யாகிய
    வளர்ந்த கோங்கு மரத்தின் இளம் சிறப்பான அரும்பையொத்த
  • தனவாஞ்சையிலே முக மாயையில்
    மார்பகங்களின் மேல் வைத்த ஆசையாலும், முகத்தின் மயக்கத்தாலும்,
  • வளமாந்தளிர் போல்நிற மாகிய வடிவாலே
    செழுமையான மாந்தளிர் போன்ற நிறத்து வடிவத்தாலும்,
  • இருள்போன்றிடு வார்குழல் நீழலில்
    இருளையொத்துக் கருத்து நீண்ட கூந்தலின் நிழலாலும்,
  • மயல்சேர்ந்திடு பாயலின் மீதுற
    காம மயக்கம் கொண்ட படுக்கையின் மேலே பொருந்த,
  • இனிதாங்கனி வாயமு தூறல்கள் பருகாமே
    இனிதான கோவைக்கனி இதழ்களின் அமுதாகிய ஊறல்களை உண்ணாதபடி,
  • எனதாந் தனதானவை போயற
    என்னுடையவை, தன்னுடையவை என்றவை நீங்கி அற்றுப்போகவும்,
  • மலமாங் கடு மோகவிகாரமு மிவைநீங்கிடவே
    மும்மலங்களினால் உண்டாகும் காம விகாரங்கள் அனைத்தும் அகன்றிடவும்,
  • இரு தாளினை யருள்வாயே
    உன் இரு திருவடிகளை அருள்வாயாக.
  • கரிவாம்பரி தேர்திரள் சேனையும்
    யானைப்படையும், தாவும் குதிரைப் படையும், தேர்ப்படையும், திரண்ட காலாட்படையும்,
  • உடனாந்துரி யோதன னாதிகள்
    ஒன்றாகக் கூடியுள்ள துரியோதனாதியர்
  • களமாண்டிடவே யொரு பாரதம் அதிலேகி
    போர்க்களத்தில் இறந்தழிய, ஒரு பாரதப் போர்க்களத்தில் சென்று,
  • கனபாண்டவர் தேர்தனி லே
    பெருமைவாய்ந்த பாண்டவர்களின் தேரிலே,
  • எழுபரிதூண்டிய சாரதி யாகிய
    கிளம்பிப் பாயும் குதிரைகளைச் செலுத்திய தேரோட்டி ஆனவனும்,
  • கதிரோங்கிய நேமியனாம்
    ஒளி மிகுந்த சுதர் ன சக்கரத்தை உடையவனுமான
  • அரி ரகுராமன்
    ஹரி, ரகுராமன், ஆகிய திருமாலும்,
  • திரைநீண்டிரை வாரியும் வாலியும்
    அலைகள் ஓங்கி ஒலிக்கும் கடலையும், வாலியையும்,
  • நெடிதோங்குமராமரம் ஏழொடு
    நீண்டு உயர்ந்த ஏழு மராமரங்களையும்,
  • தெசமாஞ்சிர ராவணனார்முடி பொடியாக
    பத்துத் தலைகளையுடைய ராவணனின் சிரங்களையும் பொடிபடும்படி
  • சிலைவாங்கிய நாரணனார் மருமகனாங் குகனே
    கோதண்ட வில்லை வளைத்த (ராமனாக வந்த) நாராயணனின் மருகனான குகனே,
  • பொழில் சூழ்தரு திருவேங்கட மாமலை மேவிய பெருமாளே.
    சோலைகள் சூழ்ந்த திருவேங்கடமாம் திருமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com