தானந் தனத்ததன தானந் தனத்ததன
தானந் தனத்ததன ...... தனதான
தேனுந்து முக்கனிகள் பால்செங் கருப்பிளநிர்
சீரும் பழித்தசிவ ...... மருளூறத்
தீதும் பிடித்தவினை யேதும் பொடித்துவிழ
சீவன் சிவச்சொருப ...... மெனதேறி
நானென்ப தற்றுயிரொ டூனென்ப தற்றுவெளி
நாதம் பரப்பிரம ...... வொளிமீதே
ஞானஞ் சுரப்பமகி ழாநந்த சித்தியொடெ
நாளுங் களிக்கபத ...... மருள்வாயே
வானந் தழைக்கஅடி யேனுஞ் செழிக்கஅயன்
மாலும் பிழைக்கஅலை ...... விடமாள
வாருங் கரத்தனெமை யாளுந் தகப்பன்மழு
மானின் கரத்தனருள் ...... முருகோனே
தானந் தனத்ததன னாவண்டு சுற்றிமது
தானுண் கடப்பமல ...... ரணிமார்பா
தானங் குறித்துஎமை யாளுந் திருக்கயிலை
சாலுங் குறத்திமகிழ் ...... பெருமாளே.
- தேன் உந்து முக்கனிகள்
நல்ல தேன், உயர்ந்த முக்கனிகள் (மா, பலா, வாழை) - பால்செங் கருப்பிளனிர்
பால், சிவந்த கரும்பு, இள நீர் - சீரும்
இவைகளின் இனிப்பின் சிறப்பையும் - பழித்த
(தனது ஒப்பற்ற தனிப் பெரும் இனிமையால்) தாழ்மைப்படுத்துகின்ற - சிவம் அருள் ஊற
மேலான சிவத்தின் திருவருள் ஊற்றெடுத்துப் பெருகவும், - தீதும் பிடித்தவினை யேதும்
தீவினை, நல்வினை முழுவதும் - பொடித்துவிழு
தூள்பட்டு ஒழியவும், - சீவன் சிவச்சொருபம்
இந்த ஜீவன் சிவவடிவாக விளங்குகிறது - என தேறி
என்று நன்கு தெளிந்து, - நானென்ப தற்று
அகங்காரத்தை அடியோடு நீத்தும், - உயிரொ(டு) ஊனென்ப(து) அற்று
உயிர்ப்பற்று, உடற்பற்று இரண்டையும் அகற்றியும், - வெளிநாதம் பரப்பிரம
(சிதாகாசம் என்ற) பரவெளியில் உள்ள அருள்நாதப் பிரம்மமாம் - ஒளிமீதே
பரஞ்ஜோதியில் - ஞானம் சுரப்ப
சிவ ஞானம் பெருகிவரவும், - மகிழ் ஆனந்த சித்தியொடு
மகிழ்ச்சி ஊறும் சிவானந்த மோட்சத்தில், - எநாளும் களிக்க
அடியேன் எந்நாளும் மகிழ்ந்திருக்குமாறு - பதம் அருள்வாயே
நின் திருவடியைத் தந்தருள்வாயாக - வானம் தழைக்க
விண்ணுலகு தழைத்து ஓங்கும் பொருட்டும், - அடியேனும் செழிக்க
அடியேனும் சிவநலம் பெற்று உய்வதன் பொருட்டும், - அயன் மாலும் பிழைக்க
பிரம்மாவும், திருமாலும் (சூரனால் அழியாது) வாழும் பொருட்டும், - அலை விட(ம்) மாள
பாற்கடலில் தோன்றிய விஷத்தின் வலிமை அழிய - வாருங் கரத்தன்
(அவ்விஷத்தை) குடிக்க வாரி எடுத்த கரத்தை உடையவரும், - எமை யாளும் தகப்பன்
எங்களை ஆட்கொள்ளும் பரம பிதாவும், - மழு மானின் கரத்தன்
நெருப்பையும், மானையும் ஏந்திய திருக்கரத்தை உடையவருமான சிவபெருமான் - அருள் முருகோனே
பெற்றருளிய முருகக் கடவுளே - தானந் தனத்ததனனா
தானந் தனத்ததனனா என்ற ரீங்காரத்துடன் - வண்டு சுற்றி
வண்டானது வட்டமிட்டு - மது தானுண்
தேனை உண்ணுகின்ற - கடப்பமலர்
கடப்ப மலரை - அணிமார்பா
தரித்துக் கொள்கிற திருமார்பை உடையவனே - தானங் குறித்து
(எமைக் காப்பதற்கு) தக்க இடமாகக் குறித்து - எமை யாளும்
எங்களை ஆட்கொள்ளவென்றே - திருக்கயிலை சாலும்
திருக்கயிலாய மலைமேல் எழுந்தருளிய, - குறத்திமகிழ் பெருமாளே.
வள்ளிநாயகி மகிழ்கின்ற பெருமாளே.



