திருப்புகழ் · 515பரமகுரு நாத (சிதம்பரம்)
paramagurunAdha
தனதனன தான தனதனன தான
தனதனன தானத் ...... தனதானா
Yaazh Music
பரமகுரு நாத கருணையுப தேச
பதவிதரு ஞானப் ...... பெருமாள்காண்
பகலிரவி லாத ஒளிவெளியில் மேன்மை
பகருமதி காரப் ...... பெருமாள்காண்
திருவளரு நீதி தினமனொக ராதி
செகபதியை யாளப் ...... பெருமாள்காண்
செகதலமும் வானு மருவையவை பூத
தெரிசனைசி வாயப் ...... பெருமாள்காண்
ஒருபொருள தாகி அருவிடையை யூரு
முமைதன்மண வாளப் ...... பெருமாள்காண்
உகமுடிவு கால மிறுதிகளி லாத
உறுதியநு பூதிப் ...... பெருமாள்காண்
கருவுதனி லூறு மருவினைகள் மாய
கலவிபுகு தாமெய்ப் ...... பெருமாள்காண்
கனகசபை மேவி அனவரத மாடு
கடவுள்செக சோதிப் ...... பெருமாளே.
பத உரை · word meanings
- பரமகுரு நாத கருணையுப தேச
பரமசிவனுக்கும் குருநாதனே, கருணையுடன் உபதேசிப்பவனே, - பதவிதரு ஞானப் பெருமாள்காண்
அருட் பதவிகளைத் தருகின்ற பெருமாள் நீதான். - பகலிரவிலாத ஒளிவெளியில்
பகலும் இரவும் அற்றதான ஞான ஒளிவீசும் சிதாகாச வெளியில் - மேன்மை பகரும் அதிகாரப் பெருமாள்காண்
மேலான உண்மைப் பொருளை விளக்கும் அதிகாரம் கொண்டுள்ள பெருமாள் நீதான். - திருவளரு நீதி தின மனொகர ஆதி
முக்திச் செல்வத்தை வளர்க்கின்ற நீதியே, நித்ய மனோகரனே, ஆதிப் பரம்பொருளே, - செகபதியை யாளப் பெருமாள்காண்
உலகிலுள்ள மன்னர்களை எல்லாம் ஆள்கின்ற பெருமாள் நீதான். - செகதலமும் வானு மருவு ஐ அவை பூத
மண்ணும், விண்ணும், அவற்றில் பொருந்தியுள்ள ஐந்து பூதங்களிலும் கலந்து விளங்கி - தெரிசனைசிவாயப் பெருமாள்காண்
தரிசனம் தரும் சிவாயநம என்ற பஞ்சாட்சரப் பொருளான பெருமாள் நீதான்*. - ஒருபொருள் அதாகி அருவிடையை யூரும்
ஏக வஸ்துவாகி அருமையான ரிஷப வாகனத்தில் ஏறுகின்ற - உமைதன்மண வாளப் பெருமாள்காண்
பார்வதியின் மணவாளப் பெருமாளும் நீதான்*. - உகமுடிவு காலம் இறுதிகளிலாத
பிரபஞ்சங்களின் யுக முடிவு, காலம், இறுதிகள் என்பவை இல்லாத - உறுதி அநுபூதிப் பெருமாள்காண்
நிலைபெற்ற சிவாநுபூதியைத் தந்தருளும் பெருமாள் நீதான். - கருவுதனில் ஊறும் அருவினைகள் மாய
கருக்குழியிலிருந்தே ஊறி வருகின்ற கொடிய வினைகள் அழிய - கலவிபுகு தாமெய்ப் பெருமாள்காண்
மீண்டும் என்னை மாயப் பிரபஞ்ச சேர்க்கையில் புகுத்தாத பெருமாள் நீதான். - கனகசபை மேவி அனவரதம் ஆடு
பொன்னம்பலத்தில் (சிதம்பரம்) பொருந்தி எப்போதும் திருநடனம் புரிகின்ற* - கடவுள்செக சோதிப் பெருமாளே.
தெய்வமாகின்ற ஜெகஜ்ஜோதியான பெருமாளே.




