தனன தந்தன தந்த தானன
தனன தந்தன தந்த தானன
தனன தந்தன தந்த தானன ...... தந்ததான
மதிய மண்குண மஞ்சு நால்முக
நகர முன்கலை கங்கை நால்குண
மகர முன்சிக ரங்கி மூணிடை ...... தங்குகோண
மதன முன்தரி சண்ட மாருத
மிருகு ணம்பெறி லஞ்செ லோர்தெரு
வகர மிஞ்சிய கன்ப டாகமொ ...... ரொன்றுசேருங்
கதிர டங்கிய அண்ட கோளகை
யகர நின்றிடும் ரண்டு கால்மிசை
ககன மின்சுழி ரண்டு கால்பரி ...... கந்துபாயுங்
கருணை யிந்திரி யங்கள் சோதிய
அருண சந்திர மண்ட லீகரர்
கதிகொள் யந்திர விந்து நாதமொ ...... டென்றுசேர்வேன்
அதிர பம்பைகள் டங்கு டாடிக
முதிர அண்டமொ டைந்து பேரிகை
டகுட டண்டட தொந்த தோதக ...... என்றுதாளம்
அதிக விஞ்சையர் தும்ப்ரு நார்தரோ
டிதவி தம்பெறு சிந்து பாடிட
அமரர் துந்துமி சங்கு தாரைகள் ...... பொங்கவூடு
உதிர மண்டல மெங்கு மாயொளி
யெழகு மண்டியெ ழுந்து சூரரை
உயர்ந ரம்பொடெ லும்பு மாமுடி ...... சிந்திவீழ
உறுசி னங்கொடெ திர்ந்த சேவக
மழைபு குந்துய ரண்டம் வாழ்வுற
வுரக னும்புலி கண்ட வூர்மகிழ் ...... தம்பிரானே.
- மதியம் மண் குணம் அஞ்சு நால் முக(ம்) நகர(ம்) முன்கலை
சந்திரனது உதவியைக் கொள்ளும் மண்ணின் குணம் ஐந்தாகும்.* 1 (அந்த மண்ணுலகம்) நாற் கோண வடிவைக் கொண்டது. (பஞ்சாட்சரத்தில்) - ந
என்னும் எழுத்தையும், (பஞ்ச* 2 கலைகளில்) முன் கலையான நிவர்த்தி கலையையும் கொண்டது. - கங்கை நால் குண(ம்) மகரம்
நீர் (அப்பு மண்டலம்) நான்கு* 3 குணம் கொண்டது. இது பஞ்சாட்சரத்தில் - ம
என்னும் எழுத்தைக் குறிக்கும். - முன் சிகர(ம்) அங்கி மூணிடை தங்கு கோண(ம்)
அப்பு மண்டலத்துக்கு முன் உள்ள அக்கினி மண்டலம் பஞ்சாட்சரத்தில் - சி
என்னும் எழுத்தைக் குறிக்கும். (இந்த அக்கினி மண்டலம்) மூன்று* 4 குணமும் முக்கோணமும் கொண்டது. - மதனம் முன் தரி சண்ட மாருதம் இரு குணம் பெறில் அஞ்சு
எல் ஓர் தெரு வகரம்
அழித்தல் தன்மையை தன்னிடத்தே கொண்டுள்ள பெருங் காற்று (வாயு மண்டலம்) இரண்டு* 5 குணங்களைப் பெற்றதாய், ஐந்துடன் ஒன்று சேர்கின்ற (ஆறு) ஒளி பொருந்திய வீதியாகும். (அதாவது வாயு மண்டலம் ஆறு கோண வடிவானது). பஞ்சாட்சரத்தில் உள்ள - வா
என்னும் எழுத்தைக் குறிக்கும். - மிஞ்சி அகன் படா கம் ஒர் ஒன்று சேரும் கதிர் அடங்கிய
அண்ட கோளகை யகர(ம்) நின்றிடும்
விரிந்துள்ள ஆகாயம் ஒப்பற்ற ஒன்று சேரும் குணத்தை (சப்தத்தைக்) கொண்டதாகும். (இந்த ஆகாய மண்டலம்) சூரிய சந்திரர் அடங்கி விளங்குவதான அண்ட உருண்டையான வட்ட வடிவம் கொண்டது. இதை - ய
என்னும் எழுத்து நின்று விளக்கும். - (இ)ரண்டு கால் மிசை ககன(ம்) மின் சுழி (இ)ரண்டு கால்
பரி கந்து பாயும்
(ரேசகம், பூரகம் என்னும்) இரண்டு வழி கொண்டு அண்டமாகிய ஒளி கொண்ட உச்சியில் (கபாலத்தில்) இடை கலை, பிங்கலை* 6 என்னும் நடையுள்ள குதிரைகள் பாய்ந்து செல்வன ஆகும். - கருணை இந்திரியங்கள் சோதிய அருண சந்திர மண்டலீகரர்
கதி கொள் யந்திர விந்து நாதமொடு என்று சேர்வேன்
(அவைகளை வசப்படுத்த) இந்திரியங்களின் அருள் ஜோதி விளங்க, சூரிய மண்டலம், சந்திர மண்டலம், அக்கினி மண்டலம் ஆகிய மும் மண்டலங்களில் பொருந்தியுள்ள மூர்த்திகள் பிரசன்னமாகும் மந்திர சக்தியால் லிங்கவடிவ சிவத்துடன் நான் என்று சேர்வேன்? - அதிர பம்பைகள் டங்கு டாடிக முதிர அண்டமொடு ஐந்து
பேரிகை டகுட டண்டட தொந்ததோதக என்று தாளம்
அதிக
ஒலிக்கும் பறைகள் டங்கு டாடிக என்ற பேரொலியை முற்றின வகையில் எழுப்ப, அண்டங்களில் ஐந்து வகையான பேரிகை (தோற்கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக் கருவி என்னும் ஐவகை வாத்தியங்கள்) டகுட டண்டட தொந்த தோதக என்று தாளம் மிக்கு ஒலிக்க, - விஞ்சையர் தும்ப்ரு நார்தரொடு இத விதம் பெறு சிந்து பாடிட
அமரர் துந்துமி சங்கு தாரைகள் பொங்க ஊடு
பதினெண்கணங்களுள் ஒருவராகிய வித்தியாதரர், தும்புரு நாரதர் என்பவர்களுடன் இன்பகரமான முறையில் சிந்து முதலிய இசை வகையைப் பாட, தேவர்கள் தேவபேரிகை, சங்கம், தாரைகள் (நீண்ட ஊதுங் குழல்கள்) இவைகளை முழக்கி அவ்வொலி இடையே மேலெழுந்து பொங்க, - உதிர மண்டலம் எங்குமாய் ஒளி எழ குமண்டி எழுந்து சூரரை
உயர் நரம்பொடு எலும்பு மா முடி சிந்தி வீழ உறு சினம்
கொண்டு எதிர்த்த சேவக
இரத்தப் பெருக்கின் வெள்ளம் எல்லாவிடத்தும் பரவ, தீயின் ஒளி வீச, குதித்து எழுந்து போருக்கு வந்த சூரர்களை (அவர்களுடைய) பெரிய நரம்புகளுடன், எலும்புகளும் மாமுடிகளும் சிதறுண்டு விழும்படியாக கோபத்துடன் எதிர்த்துப் போர் புரிந்த வலிமையாளனே, - மழை புகுந்து உயர் அண்டம் வாழ்வுற உரகனும் புலி கண்ட ஊர்
மகிழ் தம்பிரானே.
மழை பெய்து உயர்ந்த இப்பூமியில் உள்ளோர் வாழ்வுறும்படி, பாம்பு உருவராகிய பதஞ்சலியும், புலி உருவரான வியாக்ரபாதரும் (இறைவன் நடனத்தைத்) தரிசித்த தலமாகிய சிதம்பரத்தில் மகிழ்ந்து வீற்றிருக்கும் தம்பிரானே.



