தந்தத் தனனத் தந்தத் தனனத்
தந்தத் தனனத் ...... தனதானா
கொங்கைப் பணையிற் செம்பொற் செறிவிற்
கொண்டற் குழலிற் ...... கொடிதான
கொன்றைக் கணையொப் பந்தக் கயலிற்
கொஞ்சுக் கிளியுற் ...... றுறவான
சங்கத் தொனியிற் சென்றிற் கடையிற்
சந்திப் பவரைச் ...... சருவாதே
சந்தப் படியுற் றென்றற் றலையிற்
சந்தப் பதம்வைத் ...... தருள்வாயே
அங்கப் படைவிட் டன்றைப் படுகைக்
கந்திக் கடலிற் ...... கடிதோடா
அந்தப் பொழிலிற் சந்துத் தலையுற்
றஞ்சப் பொருதுற் ...... றொழியாதே
செங்கைக் கதிருற் றொன்றக் கடலிற்
சென்றுற் றவர்தற் ...... பொருளானாய்
சிந்தைக் கனிவைத் தந்தப் பொழிலிற்
செந்திற் குமரப் ...... பெருமாளே.
- கொங்கைப் பணையில் செம் பொன் செறிவில்
பருமையான மார்பிலும், செம்பொன்னாலான அணிகலன்களிலும், - கொண்டல் குழலில் கொடிதான கொன் தைக் கணை ஒப்ப
அந்தக் கயலில்
மேகம் போன்ற கரிய கூந்தலிலும், கொடிய வலிமையுடன் தைக்கின்ற அம்புக்கு ஒப்பான அந்தக் கயல் மீன் போன்ற கண்களிலும், - கொஞ்சுக் கிளி உற்று உறவான சங்கத் தொனியில் சென்று
இல் கடையில் சந்திப்பவரைச் சருவாதே
கொஞ்சுகின்ற கிளி போன்ற பேச்சுக்கு உறவான சங்கு போன்ற கண்டத்தின் குரலிலும் ஈர்க்ப்பட்டுச் சென்று, வீட்டின் வெளிப்புறத்தில் தம்மிடம் வருவோரைச் சந்திப்பவர்களாகிய விலைமாதர்களுடன் கொஞ்சிக் குலவாமல், - சந்தப் படி உற்று என்றன் தலையில் சந்தப் பதம் வைத்து
அருள்வாயே
பேரின்ப சுக நிலையை நான் அடைய, எனது தலையில் உனது அழகிய திருவடியை வைத்து அருள் புரிவாயாக. - அங்கு அப் படை விட்டு அன்றைப் படுகைக்கு அந்திக்
கடலில் கடிது ஓடா
அங்கு தனது சேனையை விட்டு நீங்கி, அப்பொழுதே நீர் நிலையாகிய (செந்திலுக்கும் சூரனுடைய தலைநகரான மகேந்திரபுரத்துக்கும் இடையே) சந்தியாக உள்ள கடலை விரைவாகத் தாண்டி, - அந்தப் பொழிலில் சந்துத் தலை உற்று அஞ்சப் பொருது
உற்று ஒழியாதே
அந்தப் பூமியாகிய மகேந்திரபுரத்தில் (முருகனின்) தூதாகச் சென்று, அசுரர்கள் பயப்படும்படி போர் செய்து, அவர்களுக்கு அஞ்சி நீங்காமல், - செம் கைக் கதிர் உற்று ஒன்றி அக் கடலில் சென்று உற்றவர்
தற் பொருள் ஆனாய்
சிவந்த கிரணங்களை உடைய சூரியனைப் போலப் பொருந்தி, அக் கடல் கடந்து போய் வெற்றியுடன் வந்தவரான வீரபாகு தேவரின் ஆவிப் பொருள் ஆனவனே, - சிந்தைக் கனிவைத் தந்து அப் பொழிலில் செந்தில் குமரப்
பெருமாளே.
சிந்தையின் அன்பு வைத்து, அழகிய பொழில் சூழ்ந்த திருச்செந்தூரில் தங்கும் குமரப் பெருமாளே.