திருப்புகழ் 491 கொந்தள வோலைகள் ஆட (சிதம்பரம்)

தந்தன தானன தானத்தம்
தந்தன தானன தானத்தம்
தந்தன தானன தானத்தம் ...... தனதான
கொந்தள  வோலைக  ளாடப்பண் 
சங்கொளி  போல்நகை  வீசித்தண் 
கொங்கைகள்  மார்பினி  லாடக்கொண்  ......  டையென்மேகம் 
கொங்கெழு  தோள்வளை  யாடக்கண் 
செங்கயல்  வாளிகள்  போலப்பண் 
கொஞ்சிய  கோகில  மாகப்பொன்  ......  பறிகாரர் 
தந்திர  மாமென  வேகிப்பொன் 
தொங்கலொ  டாரமு  மாடச்செந் 
தம்பல  வாயொடு  பேசிக்கொண்  ......  டுறவாடிச் 
சம்பள  மீதென  வோதிப்பின் 
பஞ்சணை  மேல்மய  லாடச்சஞ் 
சங்கையில்  மூளியர்  பால்வைக்குஞ்  ......  செயல்தீராய் 
அந்தக  னாருயிர்  போகப்பொன் 
திண்புர  மோடெரி  பாயப்பண் 
டங்கச  னாருடல்  வேகக்கண்  ......  டழல்மேவி 
அண்டர்க  ளோடட  லார்தக்கன் 
சந்திர  சூரியர்  வீழச்சென் 
றம்பல  மீதினி  லாடத்தன்  ......  குருநாதா 
சிந்துர  மோடரி  தேர்வர்க்கம் 
பொங்கமொ  டேழ்கடல்  சூர்பத்மன் 
சிந்திட  வேல்விடு  வாகைத்திண்  ......  புயவேளே 
செங்குற  மாதுமி  னாளைக்கண் 
டிங்கித  மாயுற  வாடிப்பண் 
செந்தமிழ்  மால்புலி  யூர்நத்தும்  ......  பெருமாளே. 
  • கொந்தள ஓலைகள் ஆடப் பண் சங்கு ஒளி போல் நகை வீசித் தண் கொங்கைகள் மார்பினில் ஆட
    தலை மயிர்ச் சுருளின் கீழுள்ள காதோலைகள் அசைய, சீரான சங்கின் ஒளியைப் போல பற்கள் ஒளியை வீசி, குளிர்ச்சியான மார்பகங்கள் நெஞ்சில் அசைய,
  • கொண்டை என் மேகம் கொங்கு எழு தோள் வளை ஆடக் கண் செம் கயல் வாளிகள் போல
    கொண்டை என்கின்ற கறுத்த மேகமும் வாசனையை எழுப்பி வீச, தோள் வளையல்கள் ஆட, கண்கள் சிவந்த கயல் மீன் போலவும் அம்புகள் போலவும் விளங்க,
  • பண் கொஞ்சிய கோகிலமாகப் பொன் பறிகாரர் தந்திரமாம் என ஏகி
    இசை கொஞ்சும் குயிலென விளங்கி, பொன் காசுக்களைப் பறிப்பவர்களாகிய விலைமாதர்கள் தந்திரச் செயல்களுடன் சென்று,
  • பொன் தொங்கலொடு ஆரமும் ஆடச் செம் தம்பல வாயொடு பேசிக் கொண்டு உறவாடி
    பொன் மாலையுடன் ஆரமும் கழுத்தில் அசைய, சிவந்த தாம்பூலக் கரையுடைய வாயுடன் பேசியிருந்து, பல உறவு முறைகளைக் கையாண்டு,
  • சம்பளம் ஈது என ஓதிப் பின் பஞ்சணை மேல் மயல் ஆடு அச்சம் சங்கை இல் மூளியர் பால் வைக்கும் செயல் தீராய்
    (தனக்குக் கொடுக்க வேண்டிய) தொகை இவ்வளவு என்று நிச்சயித்து, அதன் பின்னர் பஞ்சு மெத்தையின் மேல் காம மயக்கப் பேச்சுக்களைப் பேசும், பயமும் வெட்கமும் இல்லாத அறிவிலிகளிடத்தே அன்பு வைக்கும் இழிச் செயலை ஒழித்தருளுக.
  • அந்தகன் ஆருயிர் போகப் பொன் திண் புரமோடு எரி பாயப் பண்டு அங்கசனார் உடல் வேகக் கண் தழல் மேவி
    யமனுடைய அரிய உயிர் அழிந்து போகவும், அழகிய வலிய திரி புரங்கள் எரி பாய்ந்து அழியவும், முன்பு மன்மதனுடைய உடல் வெந்து விழவும், நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்பைச் செலுத்தி,
  • அண்டர்களோடு அடல் ஆர் தக்கன் சந்திர சூரியர் வீழச் சென்று அம்பல மீதினில் ஆடு அத்தன் குருநாதா
    தேவர்களுடன் வலிமை பொருந்திய தக்கன், சந்திர சூரியர்களும் பங்கப்பட விழச் செய்தபின் போய் (சிதம்பரத்திலுள்ள) பொன் அம்பலத்தின் மீது கூத்தாடின பெருமானாகிய சிவபிரானுக்குக் குரு நாதனே,
  • சிந்துரமோடு அரி தேர் வர்க்கம் பொங்கமொடு ஏழ் கடல் சூர் பத்மன் சிந்திட வேல் விடு வாகைத் திண் புய வேளே
    யானையுடன், குதிரை, தேர்க் கூட்டங்களின் சேனைகள் எழுச்சியுடன், ஏழு கடல்களும், சூரபத்மனும் அழிபட வேலைச் செலுத்திய வெற்றி வாய்ந்த வலிய புயங்களைக் கொண்ட தலைவனே,
  • செம் குற மாது மி(ன்)னாளைக் கண்டு இங்கிதமாய் உறவாடிப் பண் செந்தமிழ் மால் புலியூர் நத்தும் பெருமாளே.
    செவ்விய குற மாதாகிய வள்ளி என்னும் மின்னல் போன்ற அழகியைப் பார்த்து, இனிமையாய் உறவு பூண்டு, இசை நிரம்பிய செந்தமிழ் விளங்கும் புலியூராகிய சிதம்பரத்தை விரும்பும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com