திருப்புகழ் 486 நீல மாமுகில் (சிதம்பரம்)

தான தானன தான தானன
தான தானன தான தானன
தான தானன தான தானன ...... தனதான
நீல  மாமுகில்  போலும்  வார்குழ 
லார்கள்  மாலைகு  லாவ  வேல்கணை 
நீள  வாள்விழி  பார்வை  காதிரு  ......  குழையாட 
நீடு  மார்பணி  யாட  வோடிய 
கோடு  போலிணை  யாட  நூலிடை 
நேச  பாளித  சோலை  மாமயி  ......  லெனவேகிக் 
காலி  னூபுர  வோசை  கோவென 
ஆடி  மால்கொடு  நாணி  யேவியர் 
காய  மோடணு  பாகு  பால்மொழி  ......  விலைமாதர் 
காத  லாயவ  ரோடு  பாழ்வினை 
மூழ்கி  யேழ்நர  காழு  மூடனை 
காரிர்  பாருமை  யாசி  வாபத  ......  மருள்வாயே 
கோல  மாமயி  லேறி  வார்குழை 
யாட  வேல்கொடு  வீர  வார்  கழல் 
கோடி  கோடிடி  யோசை  போல்மிக  ......  மெருதூளாய்க் 
கோடு  கோவென  ஆழி  பாடுகள் 
தீவு  தாடசு  ரார்கு  ழாமொடு 
கூள  மாகவி  ணோர்கள்  வாழ்வுற  ......  விடும்வேலா 
நாலு  வேதமு  டாடு  வேதனை 
யீண  கேசவ  னார்ச  கோதரி 
நாதர்  பாகம்வி  டாள்சி  காமணி  ......  உமைபாலா 
ஞான  பூமிய  தான  பேர்புலி 
யூரில்  வாழ்தெய்வ  யானை  மானொடு 
நாலு  கோபுர  வாசல்  மேவிய  ......  பெருமாளே. 
  • நீல மா முகில் போலும் வார் குழலார்கள்
    கருமை மிக்க மேகம் போன்ற நீண்ட கூந்தலை உடையவர்கள்,
  • மாலை குலாவ வேல் கணை நீள வாள் விழி பார்வை காது(ம்) இரு குழை ஆட
    மாலை விளங்க, வேலையும் அம்பையும் போன்ற நீண்ட ஒளி பொருந்திய கண் பார்வைகள் சென்று வெட்டுவது போல் பாயும் இரண்டு (காதில்) குண்டலங்கள் அசைய,
  • நீடு மார்பு அணி ஆட ஓடிய கோடு போல் இணை ஆட நூல் இடை நேச பாளித(ம்)
    அகன்ற மார்பில் அணிகலன்கள் ஆட, பரந்துள்ள மலையைப் போல மார்பகங்கள் அசைய, நூலைப் போல் நுண்ணிய இடையில் தமக்கு விருப்பமான பட்டுப் புடைவையுடன்,
  • சோலை மா மயில் என ஏகிக் காலில் நூபுர ஓசை கோ என ஆடி
    சோலையில் உலவி வரும் அழகிய மயில் போலச் சென்று, காலில் உள்ள சிலம்பின் ஓசை கோ என்று ஒலி செய்ய, நடனம் ஆடி,
  • மால் கொடு நாணியே வியர் காயமோடு பாகு அ(ண்)ணு பால் மொழி விலைமாதர்
    மோகத்துடன் வெட்கம் அடைந்து, வேர்வை கொண்ட உடலுடன், சர்க்கரையில் உருகிப் பொருந்திய பால் போன்ற சொற்களை உடைய வேசிகளுடன்
  • காதலாய் அவரோடு பாழ் வினை மூழ்கி ஏழ் நரகு ஆழு(ம்) மூடனை
    ஆசை பூண்டவனாய் பாழ்படுத்தும் வினையிலே முழுகி, ஏழு நரகங்களிலும் ஆழ்ந்து விடும் முழு முட்டாளாக இருப்பினும், என்னை
  • காரிர் பாரும் ஐயா சிவா பதம் அருள்வாயே
    கண் பார்த்து அருளும் ஐயா, சிவபதம் தந்து அருள்வாயாக.
  • கோல மா மயில் ஏறி வார் குழை ஆட
    அழகிய சிறந்த மயிலின் மேல் ஏறி, நீண்ட குழைகள் (காதில்) ஆட,
  • வேல் கொடு வீர வார் கழல் கோடி கோடி இடி ஓசை போல் மிக மெரு தூளாய் கோடு கோ என
    கையில் வேல் கொண்டு, வீரம் பெரிதுள்ள கழல்கள் கோடிக் கணக்கான இடிகள் ஒலி செய்வது போல் மிக்கு ஒலிக்க, மேரு மலை பொடியாகி (அதனுடைய) சிகரங்கள் கோ என்று விழ,
  • ஆழி பாடுகள் தீவு தாடு அசுரார் குழாம் ஒடு கூளமாக வி(ண்)ணோர்கள் வாழ்வு உற விடும் வேலா
    கடல் இடங்கள், நாடுகள், வலிமை வாய்ந்த அசுரர் கூட்டங்களோடு குப்பையாகி அழிந்தொழிய, தேவர்கள் வாழ்வு பெற்று விளங்க, வேலைச் செலுத்திய வீரனே,
  • நாலு வேதம் உடாடு வேதனை ஈண கேசவனார் சகோதரி
    நான்கு வேதங்களையும் பயின்றுள்ள பிரமனைப் பெற்ற திருமாலின் சகோதரி,
  • நாதர் பாகம் விடாள் சிகா மணி உமை பாலா
    சிவபெருமானுடைய இடது பாகத்தை விடாதவள், சிகா ரத்தினம் போன்ற உமா தேவியின் குமாரனே,
  • ஞான பூமியதான பேர் புலியூரில் வாழ் தெய்வ யானை மானொடு
    ஞானபூமி என்று பேர் பெற்ற சிதம்பரத்தில் வாழ்கின்ற தேவயானையோடும், வள்ளி நாயகியோடும்,
  • நாலு கோபுர வாசல் மேவிய பெருமாளே.
    நான்கு கோபுர வாயில்களிலும் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com