தந்ததன தான தந்ததன தான
தந்ததன தான ...... தனதான
கன்றிலுறு மானை வென்றவிழி யாலே
கஞ்சமுகை மேவு ...... முலையாலே
கங்குல்செறி கேச மங்குல்குலை யாமை
கந்தமலர் சூடு ...... மதனாலே
நன்றுபொருள் தீர வென்றுவிலை பேசி
நம்பவிடு மாத ...... ருடனாடி
நஞ்சுபுசி தேரை யங்கமது வாக
நைந்துவிடு வேனை ...... யருள்பாராய்
குன்றிமணி போல்வ செங்கண்வரி போகி
கொண்டபடம் வீசு ...... மணிகூர்வாய்
கொண்டமயி லேறி அன்றசுரர் சேனை
கொன்றகும ரேச ...... குருநாதா
மன்றல்கமழ் பூக தெங்குதிரள் சோலை
வண்டுபடு வாவி ...... புடைசூழ
மந்திநட மாடு செந்தினகர் மேவு
மைந்தஅம ரேசர் ...... பெருமாளே.
- கன்றில் உறு மானை வென்ற விழியாலே கஞ்ச முகை மேவும்
முலையாலே
மான் கன்றை வெல்லும் கண்களாலும், தாமரை மொட்டுப் போன்ற மார்பகங்களாலும், - கங்குல் செறி கேச மங்குல் குலையாமை கந்த மலர் சூடும்
அதனாலே
கரு நிறம் அடர்ந்த மேகம் போன்ற கூந்தல் கலையாத வண்ணம் மணமுள்ள மலர் சூடும் அந்த வகையினாலும், - நன்று பொருள் தீர வென்று விலை பேசி நம்பவிடு மாதருடன்
ஆடி நஞ்சு புசி தேரை அங்கம் அதுவாக நைந்து விடுவேனை
அருள் பாராய்
நல்லபடியே கைப் பொருள் முழுதும் வரும்படி வெற்றியுடன் விலை கூறி (தம்மை) நம்பும்படி செய்கின்ற வேசியர்களோடு விளையாடி, விஷத்தை உடைய பாம்பு உண்ணும் தேரை (என்னும்படி) உடல் அத்தன்மையதாகி நைந்து போகின்ற என்னை அருட்கண் பார்த்தருள்க. - குன்றி மணி போல்வ செங்கண் வரி போகி* கொண்ட படம்
வீசு மணி கூர்வாய் கொண்ட மயிலேறி அன்று அசுரர் சேனை
கொன்ற குமரேச குருநாதா
குண்டு மணி போல சிவந்த கண்களையும் கோடுகளையும் உடைய பாம்பு படத்தை வீசும்படி, (தனது) அழகிய கூர்மையான வாயில் (அந்தப் பாம்பைக் கொத்திக்) கொண்ட மயிலின் மீது ஏறி, அசுரர் சேனையைக் கொன்ற குமரேசனே, குரு நாதனே, - மன்றல் கமழ் பூக(ம்) தெங்கு திரள் சோலை வண்டு படு
வாவி புடை சூழ மந்தி நடமாடு(ம்) செந்தி நகர் மேவு மைந்த
அமரேசர் பெருமாளே.
மணம் வீசும் கமுகு, தென்னை நெருங்கு சோலைகளும், வண்டுகள் ஒலிக்கும் குளங்களும் பக்கங்களில் சூழ, குரங்குகள் நடனம் செய்யும் திருச்செந்தூரில் வீற்றிருக்கும் வீரனே, தேவர்கள் பெருமாளே.