தனதன தனனாத் தனதன தனனத்
தனதன தனனாத் தனதன தனனத்
தனதன தனனாத் தனதன தனனத் ...... தனதான
செயசெய அருணாத் திரிசிவ யநமச்
செயசெய அருணாத் திரிமசி வயநச்
செயசெய அருணாத் திரிநம சிவயத் ...... திருமூலா
செயசெய அருணாத் திரியந மசிவச்
செயசெய அருணாத் திரிவய நமசிச்
செயசெய அருணாத் திரிசிவ யநமஸ்த் ...... தெனமாறி
செயசெய அருணாத் திரிதனின் விழிவைத்
தரகர சரணாத் திரியென உருகிச்
செயசெய குருபாக் கியமென மருவிச் ...... சுடர்தாளைச்
சிவசிவ சரணாத் திரிசெய செயெனச்
சரண்மிசை தொழுதேத் தியசுவை பெருகத்
திருவடி சிவவாக் கியகட லமுதைக் ...... குடியேனோ
செயசெய சரணாத் திரியென முநிவர்க்
கணமிது வினைகாத் திடுமென மருவச்
செடமுடி மலைபோற் றவுணர்க ளவியச் ...... சுடும்வேலா
திருமுடி யடிபார்த் திடுமென இருவர்க்
கடிதலை தெரியாப் படிநிண அருணச்
சிவசுடர் சிகிநாட் டவனிரு செவியிற் ...... புகல்வோனே
செயசெய சரணாத் திரியெனு மடியெற்
கிருவினை பொடியாக் கியசுடர் வெளியிற்
றிருநட மிதுபார்த் திடுமென மகிழ்பொற் ...... குருநாதா
திகழ்கிளி மொழிபாற் சுவையித ழமுதக்
குறமகள் முலைமேற் புதுமண மருவிச்
சிவகிரி அருணாத் திரிதல மகிழ்பொற் ...... பெருமாளே.
- செயசெய அருணாத்திரி சிவய நம
அஜயஜெய அருணாசலா, சிவயநம,* 1 - செயசெய அருணாத்திரி மசிவயந
அஜயஜெய அருணாசலா, மசிவயந,* 2 - செயசெய அருணாத்திரி நமசிவய திருமூலா
அஜயஜெய அருணாசலா, நமசிவய* 3 , மூலப் பொருளே, - செயசெய அருணாத்திரி யநமசிவ
அஜயஜெய அருணாசலா, யநமசிவ* 4 , - செயசெய அருணாத்திரி வயநமசி
அஜயஜெய அருணாசலா, வயநமசி* 5 , - செயசெய அருணாத் திரி சிவய நமஸ்த்து என மாறி
அஜயஜெய அருணாசலா, சிவயநமஸ்த்து* 6 என்று மாறி மாறிச் செபித்து, - செயசெய அருணாத் திரி தனின் விழி வைத்து
ஜெயஜெய என்று கூறி அருணாசலத்தில் கண்ணை வைத்து, - அர கர சரணாத்திரி என உருகி
ஹர ஹர திருவடி மலையே (சிவ மலையே) என்று கூறித் தியானித்து, - செயசெய குரு பாக்கியம் என மருவி சுடர் தாளை
ஜெய ஜெய என்னும் இந்த மந்திரம் எங்கள் குரு தந்த பாக்கியம் என்று என் உள்ளம் பொருந்தி, பேரொளியாக விளங்கும் திருவடியை - சிவசிவ சரணாத் திரிசெய செயென
சிவசிவ திருவடி மலையே ஜெயஜெய எனப் புகழ்ந்து, - சரண் மிசை தொழுது ஏத்திய சுவை பெருக
திருவடி (சிவமலை) யின் மீது வீழ்ந்து தொழுது போற்றிய இன்பம் பெருக - திருவடி சிவ வாக்கிய கடல் அமுதைக் குடியேனோ
அந்தத் திருவடியின் (ஆண்டவனது) சிவ மந்திரமாகிய பாற்கடலில் இருந்து கிடைத்த அமுதம்போன்ற இன்பரசத்தைப் பருகி மகிழேனோ? - செயசெய சரணாத் திரி என முநிவர் கணம்
ஜெய ஜெய திருவடி மலையே என்று முனிவர்களின் கூட்டங்கள் - இது வினை காத்திடும் என மருவ
இத் திருமலை வினையினின்றும் நம்மைக் காத்திடும் என்று கூடிப் பொருந்திட, - செட முடி மலை போற்று அவுணர்கள் அவிய சுடும்
வேலா
தங்கள் உடலையும் முடியையும் கிரெளஞ்சம், ஏழு குலகிரிகள் என்னும் மலைகள் காப்பாற்றுவதாக நினைத்த அசுரர்கள் மடிந்து விழச்செய்து சுட்டெரித்த வேலாயுதனே, - திரு முடி அடி பார்த்திடும் என இருவர்க்கு
திருமுடியையும் திருவடியையும் கண்டு பிடியுங்கள் எனக் கூறி திருமால், பிரமன் ஆகிய இருவருக்கும் - அடி தலை தெரியாப்படி நிண அருண சிவ சுடர்
அடியும் முடியும் தெரியாதவண்ணம் நின்ற செந்நிறச் சிவ சுடராகிய - சிகி நாட்டவன் இரு செவியில் புகல்வோனே
நெருப்புக் கண்ணை உடைய சிவபெருமானுடைய இரண்டு காதுகளிலும் (பிரணவ மந்திரத்தை) உபதேசம் செய்தவனே, - செயசெய சரணாத் திரி எனும் அடியெற்கு
ஜெயஜெய திருவடி மலையே (சிவமலையே) எனத் துதிக்கின்ற அடியேனுக்கு, - இரு வினை பொடியாக்கிய சுடர் வெளியில்
எனது (நல்வினை, தீவினை ஆகிய) இரு வினைகளையும் பொடியாக்கிய ஒளி வெளியில் - திரு நடம் இது பார்த்திடும் என மகிழ் பொன் குரு நாதா
திருநடனம் இதோ பார்ப்பாயாக எனக் கூறி மகிழ்ந்திடும் அழகிய குரு நாதனே, - திகழ் கிளி மொழி பால் சுவை இதழ் அமுத
விளங்கும் கிளி மொழி போலவும், பாலின் சுவை போலவும், வாயிதழின் ஊறல் அமுதம் போலவும் அமைந்த - குற மகள் முலை மேல் புது மணம் மருவி
குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்பின் மீது உள்ள புது மணத்தைச் சுகித்து, - சிவகிரி அருணாத்திரி தலம் மகிழ் பொன் பெருமாளே.
சிவ மலையாகிய அருணாசலத் தலத்தில் மகிழ்கின்ற அழகிய பெருமாளே.



