திருப்புகழ் 409 கரிமுகக் கடகளிறு (திருவருணை)

தனதனத் தனதனத் தனதனத் தனதனத்
தனதனத் தனதனத் ...... தனதான
கரிமுகக்  கடகளிற்  றதிககற்  பகமதக் 
கஜமுகத்  தவுணனைக்  ......  கடியானை 
கடலையெட்  பயறுநற்  கதலியிற்  கனிபலக் 
கனிவயிற்  றினிலடக்  ......  கியவேழம் 
அரிமுகத்  தினனெதிர்த்  திடுகளத்  தினின்மிகுத் 
தமர்புரிக்  கணபதிக்  ......  கிளையோனே 
அயிலெடுத்  தசுரர்வெற்  பலைவுறப்  பொருதுவெற் 
றியைமிகுத்  தறுமுகக்  ......  குமரேசா 
நரிமிகுக்  கிளைகளைப்  பரியெனக்  கடிவளக் 
கையில்பிடித்  தெதிர்நடத்  ......  திடுமீசன் 
நடனமிப்  படியிடத்  தினுமிசைத்  தரையினிற் 
கரியுரித்  தணிபவற்  ......  கொருசேயே 
துரிபெறச்  சரிபொழிற்  கனவயற்  கழகுளத் 
துரியமெய்த்  தரளமொய்த்  ......  திடவீறிச் 
சுரர்துதித்  திடமிகுத்  தியல்தழைத்  தருணையிற் 
சுடரயிற்  சரவணப்  ......  பெருமாளே. 
  • கரிமுகக் கடகளிற் றதிககற்பக
    யானை முகத்தையும் மதத்தையும் கொண்ட களிறு, சிறந்த கற்பக விநாயகர்,
  • மதக் கஜமுகத்து அவுணனைக் கடியானை
    மதங்கொண்ட யானைமுகத்து கஜமுகாசுரனை அடக்கிய யானை,
  • கடலை எள் பயறு நற் கதலியிற் கனிபலக் கனி
    கடலை, எள், பயறு, நல்ல கதலி வாழைப்பழம், பலாப் பழம்
  • வயிற் றினிலடக்கிய வேழம்
    முதலியவற்றை வயிற்றினில் அடக்கிய யானை,
  • அரிமுகத்தினன் எதிர்த்திடு களத்தினின்
    அழகிய முகத்தை உடையவன், எதிர்த்துச் சண்டைசெய்யும் போர்க்களத்தில்
  • மிகுத்து அமர்புரிக் கணபதிக்கு இளையோனே
    பெரிய போரைச் செய்யும் கணபதிக்குத் தம்பியே,
  • அயிலெடுத்து அசுரர்வெற்பு அலைவுறப் பொருது
    வேலை எடுத்து, அசுரர்களின் கிரெளஞ்ச மலையை அலைக்கழித்துச் சண்டை செய்து,
  • வெற்றியைமிகுத்த அறுமுகக் குமரேசா
    மிக்க ஜயம் கொண்ட ஆறுமுகத்துக் குமரேசனே,
  • நரிமிகுக் கிளைகளைப் பரியென
    நரியின் பெரிய கூட்டங்களை
  • கடிவளக் கையில்பிடித்து எதிர்நடத்திடும் ஈசன்
    கடிவாளத்தைக் கையிலே பிடித்து பாண்டியனின் எதிரே நடத்திய சொக்கேசர் (சிவபிரான்)
  • நடனம் இப் படியிடத் தினும்
    தமது திருவிளையாடலை இந்தப் பூமியிலே நடத்தியவர்,
  • இசைத் தரையினில் கரியுரித்து அணிபவற்கு ஒருசேயே
    புகழ் பெற்ற இவ்வுலகில் யானையை உரித்து, அதன் தோலை அணிந்தவரின் ஒப்பற்ற பிள்ளையே,
  • துரிபெறச் சரிபொழிற் கனவயற்கு
    காய்கனிகளின் சுமையால் சரிந்த மரங்கள் உள்ள சோலைகளிலும், பெருமை வாய்ந்த வயல்களிலும்,
  • அழகுள துரியமெய்த் தரளமொய்த்திட
    அழகுள்ள தூய்மையான உருவைக்கொண்ட முத்துக்கள் நெருங்கிக் கிடக்க,
  • வீறிச் சுரர்துதித்திட மிகுத் தியல்தழைத்த
    மிக்கெழுந்து தேவர்கள் துதிசெய்ய, பிரபலமாக இருக்கும் தலமாம்
  • அருணையிற் சுடர் அயிற் சரவணப் பெருமாளே.
    திருவண்ணாமலையில் ஒளிவீசும் வேலுடன் விளங்கும் சரவணப் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com