திருப்புகழ் 370 துகிலு ம்ருகமத (திருவருணை)

தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
துகிலு  ம்ருகமத  பரிமள  அளகமு 
நெகிழ  இருதன  கிரியசை  தரஇடை 
துவள  மனிதரு  மமரரு  முநிவரு  ......  முடனோடித் 
தொடர  வனமணி  மகரமி  லகுகுழை 
யடரு  வனவிட  மிளிர்வன  ரதிபதி 
சுருதி  மொழிவன  கயல்விழி  புரள்தர  ......  நடுவாக 
வகிரு  மதிபுரை  தநுநுதல்  பனிவர 
வனச  பதயுக  பரிபுர  மொலிபட 
மறுகு  தொறுமுல  வியினிய  கலவியை  ......  விலைகூறும் 
வரைவி  லரிவையர்  தருசுக  சலதியி 
லலையு  மெனதுயி  ரநுதின  நெறிதரு 
மவுன  சிவசுக  சலதியில்  முழுகுவ  ......  தொருநாளே 
முகிலு  மதியமும்  ரவியெழு  புரவியு 
நெடிய  குலைமிட  றிடறமு  துககன 
முகடு  கிழிபட  வளர்வன  கமுகின  ......  மிசைவாளை 
முடுகு  கயலுகள்  வயல்களு  முருகவிழ் 
தடமு  முளரிய  அகழியு  மதிள்களு 
முழுது  முடையதொ  ரருணையி  லுறைதரு  ......  மிளையோனே 
அகிலு  மருதமு  முகுளித  வகுளமு 
மமுத  கதலியும்  அருணமும்  வருடையு 
மபரி  மிதமத  கரிகளு  மரிகளு  ......  முடனேகொண் 
டருவி  யிழிதரு  மருவரை  தனிலொரு 
சவர  வனிதையை  முநிதரு  புனிதையை 
அவச  முடன்மல  ரடிதொழு  துருகிய  ......  பெருமாளே. 
  • துகிலு(ம்) ம்ருகமத பரிமள அளகமு(ம்) நெகிழ இரு தன கிரி அசை தர இடை துவள மனிதரும் அமரரும் முநிவரும் உடன் ஓடித் தொடர
    ஆடையும், கஸ்தூரி ஆகிய நறு மணம் கமழும் கூந்தலும் நெகிழ்ந்து குலையவும், இரண்டு மலை போன்ற மார்பகங்கள் அசையவும், இடுப்பு துவளவும், மனிதரும், தேவர்களும், முனிவர்களும் கூடவே ஓடி வந்து தொடரவும்,
  • வன மணி மகரம் இலகு குழை அடருவன விட மிளிர்வன ரதி பதி சுருதி மொழிவன கயல் விழி புரள் தர
    அழகு மணியால் ஆகிய மகர மீன் போல் விளங்கும் குண்டலங்களை தாக்குவனவாய், விஷம் பொலிவனவாய், ரதியின் கணவனான மன்மதனுடைய காம சூத்திரத்தை எடுத்துக் கூறுவனவாய், கயல் மீனை ஒத்த கண்கள் புரளவும்,
  • நடுவாக வகிரு(ம்) மதி புரை தநு நுதல் பனிவர வனச பத யுக பரிபுரம் ஒலி பட
    மத்தியில் கீறு பட்ட நிலவை ஒத்த, வில்லைப் போன்ற நெற்றி வியர்வுத் துளிகளைத் துளிக்கவும், தாமரை போன்ற இரண்டு திருவடிகளிலும் சிலம்பு ஒலிக்கவும்,
  • மறுகு தொறும் உலவி இனிய கலவியை விலை கூறும் வரைவு இல் அரிவையர் தரு சுக சலதியில் அலையும் எனது உயிர்
    தெருக்கள் தோறும் உலாவி புணர்ச்சி இன்பத்தை விலை கூறுகின்ற அளவில்லாத பொது மகளிர் கொடுக்கும் கலவி இன்பக் கடலில் அலைகின்ற என்னுடைய உயிர்,
  • அநுதின(ம்) நெறி தரு மவுன சிவசுக சலதியில் முழுகுவது ஒரு நாளே
    நாள் தோறும் நன்னெறியில் செலுத்தும் மெளன சிவ சுகக் கடலில் திளைத்து முழுகும்படியான பாக்கியம் கொண்டதாகிய நாள் ஒன்று வருமோ?
  • முகிலு(ம்) மதியமும் ரவி எழு புரவியு(ம்) நெடிய குலை மிடறு இடற முது ககன முகடு கிழிபட
    மேகமும், நிலவும், சூரியனின் ஏழு குதிரைகளும் தமது நீண்ட குலைகளின் கழுத்து பாகத்தில் இடறுண்ணவும், பழைய ஆகாய உச்சி கிழி படவும்,
  • வளர்வன கமுகு இன(ம்) மிசை வாளை முடுகு கயலுகள் வயல்களும் முருகு அவிழ் தடமு(ம்) முளரியும் அகழியும் மதில்களும் முழுதும் உடையது ஒர் அருணையில் உறை தரும் இளையோனே
    உயர்ந்து வளர்ந்துள்ள கமுகு மரங்கள் கூட்டத்தின் மேல் பாயும் வாளை மீன்களும் (அவைகளால்) விரட்டப்படும் கயல் மீன்களும் ஓடித் திரியும் வயல்களும், நறு மணம் வீசும் குளங்களும் தாமரை மலர்கள் விளங்கும் அகழிகளும், மதில்களும் இவை எல்லாம் உடையதான ஒப்பற்ற திருவண்ணாமலையில் வீற்றிருக்கின்ற இளையவனே,
  • அகிலும் மருதமும் முகளித வகுளமும் அமுத கதலியும் அருணமும் வருடையும் அபரிமித மத கரிகளும் அரிகளும் உடனே கொண்ட அருவி இழி தரும் அரு வரை தனில்
    அகில், மருதம், மலர் விடும் மகிழ மரம், அமுதம் போல் இனிக்கும் வாழை மரம் ஆகியவைகளும், செம்மறி ஆடும், மலை ஆடும், கணக்கற்ற மத யானைகளும், குரங்குகளும், உடனே இழுபட்டுவரப் பாயும் அருவிகள் இறங்கி வரும் அருமையான (வள்ளி) மலையில்,
  • ஒரு சவர வனிதையை முநி தரு புனிதையை அவசமுடன் மலர் அடி தொழுது உருகிய பெருமாளே.
    ஒப்பற்ற வேடுவப் பெண்ணும், சிவ முனிவர் தவத்தே வந்த பரிசுத்தமான நங்கையுமாகிய வள்ளியை தன்வசமிழந்த ஆசையுடன் திருவடிகளைத் தொழுது மனமுருகும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com