தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
அருவ மிடையென வருபவர் துவரிதழ்
அமுது பருகியு முருகியு ம்ருகமத
அளக மலையவு மணிதுகி லகலவு ...... மதிபார
அசல முலைபுள கிதமெழ அமளியில்
அமளி படஅந வரதமு மவசமொ
டணையு மழகிய கலவியு மலமல ...... முலகோரைத்
தருவை நிகரிடு புலமையு மலமல
முருவு மிளமையு மலமலம் விபரித
சமய கலைகளு மலமல மலமரும் ...... வினைவாழ்வுஞ்
சலில லிபியன சனனமு மலமல
மினியு னடியரொ டொருவழி படஇரு
தமர பரிபுர சரணமு மவுனமு ...... மருள்வாயே
உருவு கரியதொர் கணைகொடு பணிபதி
யிருகு தையுமுடி தமனிய தநுவுட
னுருளை யிருசுடர் வலவனு மயனென ...... மறைபூணும்
உறுதி படுசுர ரதமிசை யடியிட
நெறுநெ றெனமுறி தலுநிலை பெறுதவம்
உடைய வொருவரு மிருவரு மருள்பெற ...... வொருகோடி
தெருவு நகரியு நிசிசரர் முடியொடு
சடச டெனவெடி படுவன புகைவன
திகுதி கெனஎரி வனஅனல் நகைகொடு ......முனிவார்தஞ்
சிறுவ வனசரர் சிறுமியொ டுருகிய
பெரும அருணையி லெழுநிலை திகழ்வன
சிகரி மிசையொரு கலபியி லுலவிய ...... பெருமாளே.
- அருவம் இடை என வருபவர் துவர் இதழ் அமுது பருகியும்
உருகியும்
உருவமே இல்லாத நுண்ணிய இடை என்று கூறும்படி வந்துள்ள பெண்களின் பவளம் போன்ற வாயிதழின் ஊறலாகிய அமுதைப் பருகியும், அந்த நிலையில் உருகியும், - ம்ருகமத அளகம் அலையவும் அணி துகில் அகலவும் அதிபார
அசகம் முலை புளகிதம் எழ
கஸ்தூரி வாசனை உடைய கூந்தல் அசையவும், அணிந்த ஆடை விலகவும், மிகக் கனத்த மலை போன்ற மார்பு புளகிதம் கொள்ள, - அமளியில் அமளி பட அநவரதமும் அவசமொடு அணையும்
அழகிய கலவியும் அலம் அலம்
படுக்கையில் கோலாகலமாக எப்போதும் காம மயக்கத்தோடு தன் வசம் இழந்து சேர்கின்ற அழகிய புணர்ச்சி இன்பம் போதும் போதும். - உலகோரைத் தருவை நிகரிடு புலமையும் அலம் அலம்
உலகில் உள்ளவர்களை கற்பக மரத்துக்கு ஒப்பீர்கள் எனப் பாடும் கவித் திறமும் போதும் போதும். ஒன்றுக்கொன்று மாறுபடுகின்ற சமயக் கொள்கைகளும் போதும் போதும். - உருவும் இளமையும் அலம் அலம் விபரித சமய கலைகளும்
அலம் அலம் அலமரும் வினை வாழ்வும் சலிய லிபி அ(ன்)ன
சனனம் அலம் அலம்
அழகிய தோற்றமும், இந்த இளமையும் போதும் போதும். வேதனையும் அஞ்சுதலும் உண்டாக்கும் வினைக்கு ஈடான வாழ்வும் நீர் மேல் எழுதிய எழுத்துக்கு நேரான பிறப்பும் போதும் போதும். - இனி உன் அடியரொடு ஒரு வழிபட இரு தமர பரிபுர
சரணமு(ம்) மவுனமும் அருள்வாயே
இனியேனும் உன் அடியாரோடு நானும் ஒரு வழிப்பட்டு (உன்னுடைய) இரண்டு ஒலி செய்யும் சிலம்புகள் அணிந்த திருவடியையும், மவுன உபதேசத்தையும் அருள்வாயாக. - உருவு கரியது ஒர் கணை கொடு பணி பதி இருகு உதையும்
முடி தமனிய தநு உடன்
உருவம் கரியவனாகிய திருமாலை ஒப்பற்ற அம்பாகவும், பாம்பு அரசனான வாசுகியை (வில்லின் முனைகளில்) முடியப்படும் கயிறாகவும், பொன்னுருவ மேரு மலையை வில்லாகவும் கொண்டு, - உருளை இரு சுடர் வலவனும் அயன் என மறை பூணும்
உறுதிபடு சுர ரதமிசை அடி இட
சக்கரங்கள் சூரிய சந்திரர் எனப்படும் சுடர்களாகவும், தேர்ப்பாகன் பிரமன் ஆகவும், வேதங்களாகின குதிரைகள் பூட்டப்பட்ட திண்ணிய தேவர்களே தேர் ஆகவும் வைத்துக்கொண்டு, (சிவபெருமான்) தேரில் அடி எடுத்து வைத்தவுடனே, - நெறு நெறு என முறிதலு(ம்) நிலை பெறு தவம் உடைய
ஒருவரும் இருவரும் அருள்பெற
நெறு நெறு என்று அந்தத் தேர் முறி படவும், அசைவு உறாத தவ நிலையைக் கொண்ட திரிபுரத்தில் இருந்த மூன்று சிவபக்தர்கள்* (தீயில் மாளாது உய்ந்து) அருள் பெறவும், - ஒரு கோடி தெருவு நகரியும் நிசிசரர் முடியொடு சடசட என
வெடி படுவன புகைவன திகு திகு என எரிவன அனல்
நகையொடு முனிவார் தம் சிறுவ
(திரிபுரத்திலிருந்த) ஒரு கோடிக் கணக்கான வீதிகளும் ஊர்களும் அசுரர்கள் தலையுடன் சட சட என வெடி பட்டும், புகை விட்டும், திகுதிகு என்று எரியவிட்டும் தீ எழுப்பிய சிரிப்பைக் கொண்டு கோபித்தவரான சிவபெருமானது குழந்தையே, - வனசரர் சிறுமியொடு உருகிய பெரும அருணையில் எழு
நிலை திகழ்வன சிகரி மிசை ஒரு கலபியில் உலவிய
பெருமாளே.
வேடர்கள் மகளைக் கண்டு உருக்கம் கொண்ட பெருமை வாய்ந்தவனே, திருவண்ணாமலையில் ஏழு** நிலைகள் விளங்கும் மலை உச்சியில் ஒப்பற்ற மயிலின் மேல் அமர்ந்து உலவி விளக்கம் தரும் பெருமாளே.



