திருப்புகழ் 204 இராவினிருள் போலும் (சுவாமிமலை)

தனாதனன தானம் தனாதனன தானம்
தனாதனன தானம் ...... தனதான
இராவினிருள்  போலும்  பராவுகுழ  லாலும் 
இராமசர  மாகும்  ......  விழியாலும் 
இராகமொழி  யாலும்  பொறாதமுலை  யாலும் 
இராதஇடை  யாலும்  ......  இளைஞோர்நெஞ் 
சராவியிரு  போதும்  பராவிவிழ  வேவந் 
தடாதவிலை  கூறும்  ......  மடவாரன் 
படாமலடி  யேனுஞ்  சுவாமியடி  தேடும் 
அநாதிமொழி  ஞானந்  ......  தருவாயே 
குராவினிழல்  மேவுங்  குமாரனென  நாளுங் 
குலாவியினி  தோதன்  ......  பினர்வாழ்வே 
குணாலமிடு  சூரன்  பணாமுடிக  டோறுங் 
குடாவியிட  வேலங்  ......  கெறிவோனே 
துராலுமிகு  தீமுன்  பிராதவகை  போலுந் 
தொடாமல்வினை  யோடும்  ......  படிநூறுஞ் 
சுபானமுறு  ஞானந்  தபோதனர்கள்  சேருஞ் 
சுவாமிமலை  வாழும்  ......  பெருமாளே. 
  • இராவினிருள் போலும் பராவுகுழலாலும்
    இரவின் இருட்டைப் போல் பரவி கருத்த கூந்தலினாலும்,
  • இராமசர மாகும் விழியாலும்
    ராமனுடைய அம்பைப் போன்ற கூர்மையான கண்களாலும்,
  • இராகமொழியாலும்
    இசை நிரம்பிய வார்த்தைகளாலும்,
  • பொறாதமுலையாலும்
    பாரமான மார்பகங்களாலும்,
  • இராதஇடையாலும்
    இடுப்பு இருக்கிறதோ இல்லையோ என்னும்படியான மெல்லிய இடையாலும்,
  • இளைஞோர்நெஞ்சராவி
    இளம் ஆண்களின் இதயத்தை ரம்பம் போல் அறுத்து,
  • இரு போதும் பராவிவிழ வேவந்து
    காலையும் மாலையும் அவர்கள் தங்களைத் துதிசெய்து வீழ்த்துமாறு வந்து,
  • அடாதவிலை கூறும் மடவார்
    தகாதபடி அதிகமாக விலையைக் கூறி பேரம்செய்யும் விலைமகளிரின்
  • அன்பு அடாமல் அடியேனுஞ் சுவாமியடி தேடும்
    ஆசையின் பிடியில் அகப்படாமல், அடியேனும் கடவுளாகிய உனது திருவடிகளைத் தேடும்
  • அநாதிமொழி ஞானந் தருவாயே
    ஆதியே இல்லாத ஞானமொழியை நீ எனக்குத் தந்தருள்வாயாக.
  • குராவின் நிழல் மேவுங் குமாரனென
    (திருவிடைக்கழியிலுள்ள) குராமரத்தின் நிழலின்கீழ் அமர்ந்துள்ள குமாரக்கடவுளே என்று
  • நாளுங் குலாவியினிது ஓது அன்பினர்வாழ்வே
    தினந்தோறும் அன்புற்று அன்போடு துதிக்கும் அடியார்களின் நிதியே,
  • குணாலமிடு சூரன் பணாமுடிகள் தோறும்
    வீராவேசக் கூக்குரலிடும் சூரனின் பருத்த முடிகள் யாவும்
  • குடாவியிட வேல் அங்கு எறிவோனே
    குடைந்தெடுத்து வளைத்த வேலை அவ்விடத்தில் செலுத்தியவனே,
  • துராலும் மிகு தீமுன்பு இராதவகை போலும்
    காய்ந்த செத்தையும் மிகுத்து எரியும் நெருப்பின் முன்பு ஒன்றுமே இல்லாது வெந்து போகும் வகைபோல,
  • தொடாமல்வினை யோடும் படிநூறும்
    தம்மை அணுகாது விலகிப்போகும்படி வினைகளைப் பொடிபடச் செய்யும்
  • சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேரும்
    நல்வழிகளையே உட்கொள்ளும் ஞானத் தவசீலர்கள் சேர்ந்துள்ள
  • சுவாமிமலை வாழும் பெருமாளே.
    சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com