தானந் தத்தன தானன தானன
தானந் தத்தன தானன தானன
தானந் தத்தன தானன தானன ...... தனதான
வாதம் பித்தமி டாவயி றீளைகள்
சீதம் பற்சனி சூலைம கோதர
மாசங் கட்பெரு மூலவி யாதிகள் ...... குளிர்காசம்
மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி
யோடுந் தத்துவ காரர்தொ ணூறறு
வாருஞ் சுற்றினில் வாழ்சதி காரர்கள் ...... வெகுமோகர்
சூழ்துன் சித்ரக பாயைமு வாசைகொ
டேதுஞ் சற்றுண ராமலெ மாயைசெய்
சோரம் பொய்க்குடி லேசுக மாமென ...... இதின்மேவித்
தூசின் பொற்சர மோடுகு லாயுல
கேழும் பிற்பட வோடிடு மூடனை
தூவஞ் சுத்தடி யாரடி சேரநி ...... னருள்தாராய்
தீதந் தித்திமி தீதக தோதிமி
டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு
சேசெஞ் செக்கெண தோதக தீகுட ...... வெனபேரி
சேடன் சொக்கிட வேலைக டாகமெ
லாமஞ் சுற்றிட வேயசு ரார்கிரி
தீவும் பொட்டெழ வேயனல் வேல்விடு ...... மயில்வீரா
வேதன் பொற்சிர மீதுக டாவிந
லீசன் சற்குரு வாயவர் காதினில்
மேவும் பற்றிலர் பேறரு ளோதிய ...... முருகோனே
வேஷங் கட்டிபி னேகிம காவளி
மாலின் பித்துற வாகிவி ணோர்பணி
வீரங் கொட்பழ னாபுரி மேவிய ...... பெருமாளே.
- வாதம் பித்த மிடாவயிறு ஈளைகள்
வாதநோய், பித்த நோய்கள், பானை போன்ற வயிறு, கோழையால் வரும் க்ஷயரோகங்கள், - சீதம் பற்சனி சூலை மகோதரம்
சீதபேதி நோய், ஜன்னி, வயிற்று வலி, மகோதரம், - ஆசங் கட்பெரு மூலவி யாதிகள் குளிர்காசம்
கண்கள் சம்பந்தமான நோய்கள், பெரிய மூல வியாதிகள், ஜுரக் குளிர், காச நோய், - மாறுங் கக்கலொ டேசில நோய்பிணியோடும்
தொடர்ந்து வரும் வாந்தி முதலிய சில நோய், பிணி வகைகளுடன், - தத்துவ காரர்தொணூறறு வாருஞ் சுற்றினில் வாழ்
தொண்ணூற்றாறு* தத்துவக் கூட்டங்களின் மத்தியில் வாழ்கின்ற - சதி காரர்கள் வெகுமோகர் சூழ்
வஞ்சகர்களும் பேராசைக்காரருமான ஐம்புலன்களால் சூழப்பட்டு, - துன் சித்ர கபாயை முவாசைகொடு
பொல்லாத விசித்திரமான தேக ஆசையால், 'மண்', 'பெண்', 'பொன்' என்ற மூவாசையும் கொண்டு, - ஏதுஞ் சற்றுணராமலெ மாயைசெய்
எந்த நல்ல பொருளையும் சற்றும் உணராமல், மாயையை விளைவிக்கின்ற - சோரம் பொய்க்குடிலே சுகமாமென இதின்மேவி
கள்ளத்தனமும், பொய்ம்மையுமே கொண்ட இவ்வுடல்தான் சுகமெனக் கருதி, இந்த உடலைப் போற்றி, - தூசின் பொற்சரமோடு குலாய்
நல்ல ஆடைகளாலும், தங்கச் சங்கிலிகளாலும் அலங்கரித்து மகிழ்ந்து, - உலகேழும் பிற்படவோடிடு மூடனை
ஏழு உலகங்களும் எனக்குப் பிற்பட்டதாக எண்ணி முந்தி ஓடிடும் மூடனாகிய நான், - தூவஞ் சுத்தடி யாரடி சேரநினருள்தாராய்
தூய்மை வாய்ந்த அழகிய சுத்தமான உன் அடியார்களின் திருவடி சேரும் பாக்கியத்தைப் பெற உனது திருவருளைத் தர வேண்டுகிறேன். - தீதந் தித்திமி தீதக தோதிமி டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு
சேசெஞ் செக்கெண தோதக தீகுட வெனபேரி
தீதந் தித்திமி தீதக தோதிமி டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு சேசெஞ் செக்கெண தோதக தீகுட என்ற முழக்கத்துடன் பேரிகைகள் முழங்க, - சேடன் சொக்கிட வேலைக டாகமெலாமஞ் சுற்றிடவே
ஆதிசேஷன் மயக்கமுற, கடல்களும், அண்ட கோளங்களும் அச்சம் கொள்ள, - அசு ரார்கிரி தீவும் பொட்டெழவே
அசுரர்கள் நிறைந்து இருந்த மலைகளும், தீவுகளும் பொடி எழவே நாசமுற, - அனல் வேல்விடு மயில்வீரா
நெருப்பை வீசும் வேலினைச் செலுத்தும் மயில் வீரனே, - வேதன் பொற்சிர மீதுகடாவி
பிரமனது அழகிய சிரங்களின் மீது குட்டிப் புடைத்து, - நல் ஈசன் சற்குருவாய் அவர் காதினில்
நல்ல ஈசனாம் சிவபிரானுக்குச் சற்குருவாக அமைந்து, அவர் திருச்செவிகளில் - மேவும் பற்றிலர் பேறரு ளோதிய முருகோனே
நாடுகின்ற பற்றற்றவர்கள் பெறத்தக்கதாகிய பிரணவப் பொருளை ஓதிய முருகனே, - வேஷங் கட்டிபின் ஏகி மகாவ(ள்)ளி
வேடன், வேங்கை, கிழவன் - எனப் பல வேஷங்கள் தரித்து, பின்பு தினைப்புனம் சென்று, சிறந்த வள்ளியின் மீது, - மாலின் பித்துறவாகி
மோக மயக்கம் கொண்டு பித்துப் பிடித்தவனாகி, - விணோர்பணி வீரங் கொட்பழ னாபுரி மேவிய பெருமாளே.
தேவர்கள் பணியும் பராக்கிரமம் வாய்ந்த பழநியம்பதியில் மேவிய பெருமாளே.