திருப்புகழ் 194 வரதா மணி நீ (பழநி)

தனனா தனனா ...... தனதான
தனனா தனனா ...... தனதான
வரதா  மணிநீ  ......  யெனவோரில் 
வருகா  தெதுதா  ......  னதில்வாரா 
திரதா  திகளால்  ......  நவலோக 
மிடவே  கரியா  ......  மிதிலேது 
சரதா  மறையோ  ......  தயன்மாலும் 
சகலா  கமநூ  ......  லறியாத 
பரதே  வதையாள்  ......  தருசேயே 
பழனா  புரிவாழ்  ......  பெருமாளே. 
  • வரதா
    வேண்டுபவருக்கு வேண்டும் வரங்களை அளிப்பவனும்,
  • மணிநீயென
    கேட்பவருக்கு கேட்டதைக் கொடுக்கும் சிந்தாமணியும் நீதான் என்று
  • ஓரில்
    ஆராய்ந்து பார்த்தால்
  • வருகா தெது
    கைகூடாதது எது உண்டு?
  • எதுதான் அதில் வாரா(து)
    எந்தக் காரியம்தான் அவ்வாறு துதித்தால் நிறைவேறாது?
  • இரதாதிகளால்
    பாதரசம் போன்றவைகளை வைத்துச் செய்யும் ரசவாத வித்தை மூலம்
  • நவலோகம் இடவே கரியாம்
    ஒன்பது லோகங்களை* இட்ட கூட்டுறவால் இறுதியில் கரியாகும்.
  • இதில் ஏது
    இதனால் வேறு பயன் ஏது?
  • சரதா
    சத்திய சொரூபனே,
  • மறையோது அயன்மாலும்
    வேதம் ஓதும் பிரமனும் திருமாலும்
  • சகலாகமநூல் அறியாத
    எல்லா வேத ஆகம நூல்களும் அறியாத
  • பரதே வதையாள் தருசேயே
    பரதேவதையாகிய பார்வதி தந்தருளிய குழந்தாய்,
  • பழனா புரிவாழ் பெருமாளே.
    பழனிப்பதியில் வாழ்கின்ற பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com