தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் ...... தனதான
உற்பா தப்பூ தக்கா யத்தே
யொத்தோ டித்தத் ...... தியல்காலை
உட்பூ ரித்தே சற்றே சற்றே
யுக்கா ரித்தற் ...... புதனேரும்
அற்பா யிற்றாய் நிற்பா ரைப்போ
லப்பா வித்துத் ...... திரிவேனுக்
கப்பா சத்தா லெட்டா அப்பா
லைப்போ தத்தைப் ...... புரிவாயே
பொற்பார் பொற்பார் புத்தே ளிர்க்கா
கப்போய் முட்டிக் ...... கிரிசாடிப்
புக்கா ழிச்சூழ் கிட்டா கிச்சூர்
பொட்டா கக்குத் ...... தியவேலா
முற்பா டப்பா டற்றா ருக்கோர்
முட்கா டற்கப் ...... பொருளீவாய்
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் ...... பெருமாளே.
- உற்பாதம் பூ தக் காயத்தே
கெட்ட சகுனங்களைக் காட்டவல்ல ஐம்பூதங்களால் ஆகிய இந்த உடலைப் போற்றுதற்கு, - ஒத்து ஓடித் தத்து இயல் காலை உள் பூரித்தே சற்றே சற்றே
உக்காரித்து
உடன்பட்டு ஓடி, ஆபத்துக்கள் நேரும்போது உள்ளம் கவலையால் நிரம்பப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக ஐயோ என்று சத்தமிட்டு வேதனைப்பட்டு, - அற்புதன் நேரும் அற்பாய் இல் தாய் நிற்பாரைப் போலப்
பாவித்துத் திரிவேனுக்கு
கடவுளிடத்தே உண்டாகும் அன்பு பூண்டவராய் இல்லறத்தைத் தழுவி நிற்கின்ற மக்களைப் போல் ஏமாற்றித் திரிகின்ற எனக்கு, - அப்பாசத்தால் எட்டா அப்பாலைப் போதத்தைப் புரிவாயே
அந்தப் பாசங்களால் எட்ட முடியாமல் அப்பாற்பட்டு நிற்கும் ஞான அறிவை உபதேசித்து அருள்வாயாக. - பொற்பு ஆர் பொன் பார் புத்தேளிர்க்காகப் போய் முட்டிக்
கிரி சாடி
அழகு நிறைந்த பொன் உலகத்தில் இருந்த தேவர்களுக்காகப் போர்க்களத்துக்குப் போய் அசுரர்களை எதிர்த்து, கிரெளஞ்ச மலையை அழித்து, - புக்கு ஆழிச்சூழ் கிட்டாகிச் சூர் பொட்டாகக் குத்திய வேலா
கடலிடைப் புகுந்து, (சூரனுடைய) சூழ்ச்சி நிலையை (மாமரமாக நின்றதை) சமீபித்து, அந்தச் சூரன் பொடியாகும்படி அவனை வேலால் குத்திய வேலனே, - முன் பாடப் பாடு அற்றாருக்கு ஓர் முள் காடு அற்கப்
பொருள் ஈவாய்
(பொய்யாமொழிப் புலவர்) முன்னதாகப் பாட, அப்பாட்டைக் குற்றமின்றிப் பாடாத அப்புலவருக்கு, ஒரு முள் தைக்கும் காடு என்று அப்புலவர் குறித்த இடத்தில் பிழை நிலை பெற்றிருப்பதைக் காட்டி, சரியான பொருளைக் காட்டும் பாடலை அப்புலவருக்கு அளித்தவனே*, - முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே.
முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான** அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே.