திருப்புகழ் 1 கைத்தல நிறைகனி (விநாயகர்)

தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன - தனதான
Yaazh Music
கைத்தல  நிறைகனி  அப்பமொ  டவல்பொரி 
கப்பிய  கரிமுகன்    அடிபேணிக் 
கற்றிடும்  அடியவர்  புத்தியில்  உறைபவ! 
கற்பகம்  எனவினை    கடிதேகும் 
மத்தமும்  மதியமும்  வைத்திடும்  அரன்மகன் 
மற்பொரு  திரள்புய    மதயானை 
மத்தள  வயிறனை  உத்தமி  புதல்வனை 
மட்டவிழ்  மலர்கொடு    பணிவேனே 
முத்தமிழ்  அடைவினை  முற்படு  கிரிதனில் 
முற்பட  எழுதிய    முதல்வோனே 
முப்புரம்  எரிசெய்த  அச்சிவன்  உறைரதம் 
அச்சது  பொடிசெய்த    அதிதீரா 
அத்துய  ரதுகொடு  சுப்பிர  மணிபடும் 
அப்புனம்  அதனிடை    இபமாகி 
அக்குற  மகளுடன்  அச்சிறு  முருகனை 
அக்கண  மணமருள்    பெருமாளே. 
  • கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுகன் – அடிபேணிக்
    தன் கைகளில் (துதிக்கையில்) சுவையான பழங்கள், அப்பம், அவல், பொரி போன்றவற்றை உண்ணும் யானை முகத்தை உடைய பெருமானே! உன் திருவடிகளைப் போற்றி வணங்குகிறேன்.
  • கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ! கற்பகம் எனவினை – கடிதேகும்
    உன்னைத் துதித்து வழிபடும் அடியவர்களின் மனதில் நீக்கமற நீயே நிறைந்திருப்பாய்! கற்பக மரம் கேட்டதைக் கொடுப்பது போல, நீ அடியவர்களின் வினைகளை விரைவாகப் போக்கி அருள்புரிவாய்.
  • மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய – மதயானை
    ஊமத்தம் பூவையும், சந்திரப் பிறையையும் தன் சடையில் சூடிய சிவபெருமானின் திருமகனே! மற்போர் செய்வதற்கு ஏற்ற வலிமையான திரண்ட தோள்களை உடைய மதயானை போன்றவனே!
  • மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு – பணிவேனே
    மத்தளம் போன்ற பெரிய வயிற்றை உடையவனே! உத்தமியான பார்வதி தேவியின் புதல்வனே! தேன் சொட்டும் நறுமணம் மிக்க மலர்களால் உன்னை நான் பணிந்து வணங்குவேன்.
  • முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய – முதல்வோனே
    இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழின் இலக்கண நூலான மகாபாரதத்தை, மேரு மலையில் வியாசருக்காக தன் தந்தத்தை ஒடித்து எழுதிய முதல்வனே!
  • முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடிசெய்த – அதிதீரா
    மூன்று புரங்களையும் எரித்தழித்த சிவபெருமான் ஏறிவந்த தேரின் அச்சை, தேவர்கள் உன்னை வணங்க மறந்ததால், தன் ஆற்றலால் பொடியாக்கிய ஒப்பற்ற தீரனே!
  • அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும் அப்புனம் அதனிடை – இபமாகி
    வள்ளி நாயகியை மணம் முடிக்க முடியாமல் தவித்த தன் தம்பி சுப்பிரமணியனின் (முருகன்) துயரைப் போக்க, அவர் இருந்த தினைப்புனத்திற்கு யானை வடிவம் எடுத்துச் சென்றவனே!
  • அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கண மணமருள் – பெருமாளே.
    அஞ்சி நடுங்கிய அந்த குறமகள் வள்ளியை, தன் தம்பி முருகனிடம் ஒப்படைத்து, அந்தக் கணமே அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்த பெருமைக்குரிய பெருமாளே!

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com